மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதியா? தமிழிசை புது விளக்கம்!
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மட்டுமே மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மட்டுமே மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து கர்நாடகா அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மேகதாது திட்டம் குறித்த வரைவு அறிக்கையை அம்மாநில அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருந்தது.
தற்போது மத்திய அரசு இந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இன்று காலைதான் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் மேகதாது அணை கட்ட சாத்தியக்கூறுகளை ஆராய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுதாக அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
மேகதாதுவில் அணை கட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியும் ஒப்புக்கொள்ளாது. பாஜக கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வருகிறது. நாங்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம்.
மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விஷயத்தை பல்வேறு விஷயங்களுடன் இணைத்து வைகோ பீதி ஏற்படுத்துகிறார். அரசியல்வாதிகளின் தூண்டுதலை நம்பி மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.