மத்திய அரசு தெண்டச் செலவு செய்கிறது... பண்ருட்டி வேல்முருகன் விளாசல்
சென்னை: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கு மத்திய அரசு தெண்டச் செலவு செய்து வருவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் துறையில் இடஒதுக்கீடு ஒரு தீர்வாகாது எனக் கூறிய மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியாவுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அரசுக்கு கேள்வி
அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா வகிப்பது பேருக்குத்தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையே தவிர உண்மையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான துறை அல்ல. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் எப்படி சமூக நீதியை நிலைநாட்ட முடியும்; அனைத்து மக்களுக்கும் அதிகாரமளிக்க முடியும்?
மக்கள் பணம்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை என ஒன்று மத்தியில் இருப்பதும் அதற்கென்று கேபினட் அமைச்சர் ஒருவர், இணை அமைச்சர் ஒருவர் மற்றும் இந்தத் துறைக்கென்று அலுவலகங்கள், அதில் பணியாளர்கள் இருப்பதும் மக்கள் பணத்தில் தெண்டச் செலவின்றி வேறென்ன?
இட ஒதுக்கீடு
அண்மையில் திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானங்களில் ஒன்று, தனியார் துறை வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு என்பது. இது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று என்பதையும் இங்கு குறிப்பிடுகிறோம்.
2019ல் இந்தியர்கள் எதையெல்லாம் அதிகம் தேடினார்கள்.. டாப் 10 லிஸ்ட் இதுதான்.. வெளியிட்டது கூகுள்
சாடல்
நாடாளுமன்ற மக்களவையிலேயே தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடையாது என்று கைவிரித்த ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியாவுக்கும் ஒன்றிய பாஜக மோடி அரசுக்கும் எமது கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.