''ரஜினிக்கு பிறகு பரட்டைனு பெயர் வாங்கியது நான்தான் தெரியுமா''...கலகலப்பூட்டிய தமிழிசை!
சென்னை: ரஜினிக்கு அடுத்த பரட்டை என்று பெயர் வாங்கியது நான்தான் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திராஜன் கூறினார்.
Recommended Video
காலேஜ் படிக்கும்போது என் உடைக்கே ரசிகர் கூட்டம் உண்டு என்றும் தமிழிசை சவுந்திராஜன் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திராஜன் கூறியதாவது:- ஒருமுறை நான் விமானத்தில் செல்லும்போது அருகில் அமர்ந்திருந்த சகோதரர் தன்னை 'மீம்ஸ் போடுபவர்' என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். உடனே நான் கேட்டேன். 'என்னப்பா? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? எல்லோரும் என்னை மட்டும் மீம்ஸ் போடுறீங்க. யாரும் கருப்பா இல்லையா? குள்ளமா இல்லையா? யாரும் சுருட்டை முடியோட இல்லையா?' என்று கேட்டேன்.
அக்கா உங்களை மீம்ஸ் போட்டால்தான் அதிக வியூஸ் வருகிறது. எது வியாபாரம் ஆகிறதோ அதுதானே அதிகம் பிடிக்கும். அதிக வியூஸ் வந்தால் வருமானம் வரும்' என்றார். விமானத்தில் இருந்து இறங்கும்போது 'அக்கா மன்னிச்சிடுங்க. இனிமே உங்களை மீம்ஸ் போட மாட்டேன்' என்றார். ஆனால், நானோ 'எனக்கு அவமானம் வருகிறது என்றாலும் உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் நீங்கள் தொடருங்கள். என்னால், யாருக்காவது உதவி வருகிறது, என் தன்மானத்தைக் குறைத்து உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் தொடருங்கள்' என்று தன்னம்பிக்கையூட்டினேன்.
எப்போ பார்த்தாலும் என்னை மீம்ஸ்களில் பரட்டை பரட்டை என்று போடுகிறார்கள். ரஜினிக்கு அடுத்த பரட்டை என்று பெயர் வாங்கியது நான் தான் போல. சுருட்டை முடி பறக்கிறது அவ்ளோ பெரிய இதா? காலேஜ் படிக்கும்போது என் உடைக்கே ரசிகர் கூட்டம் உண்டு" என்று நகைச்சுவையோடு பேசி இருக்கிறார்.