அதான் ரஜினி சொல்லிட்டு போயிட்டாரே.. ஏன் "இவர்" மட்டும் விடாம சுத்திட்டே இருக்காரு..!
ரஜினி அரசியல் குறித்து தமிழருவி மணியன் பேட்டி தந்துள்ளார்
சென்னை: ரஜினியே மன்னிச்சிருங்கன்னு சொல்லிட்டு போனாலும் கூட அவரது நலம் விரும்பிகள் என்று தங்களை தாங்களே கூறிக் கொள்வோர் விடுவதாக இல்லை.. உங்களுக்கு உடம்புக்கு முடியாம போனாலும் சரி நாங்க உங்களை விட மாட்டோம்... அனத்திட்டே இருப்போம் என்பது போல இவர்கள் பேசி வருவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
உண்மையிலேயே இவர்கள் ரஜினியின் நலம் விரும்பிகள்தானா அல்லது ரஜினியை விட்டால் வேறு பிழைப்பு இல்லை என்ற நிலையில் இருப்பவர்களா என்று தெரியவில்லை. காரணம், ரஜினியே என்னால் முடியாது, நான் வரவில்லை என்று சொல்லி விட்டார். உச்சகட்டமாக மன்னிப்பு கூட கேட்டு விட்டார். வேறு கட்சிகளில் போய் சேர்ந்து கொள்ளுங்கள் என்றும் கூட கூறி விட்டார்.
இதற்குப் பிறகும் ரஜினி அப்படி சொன்னாரா.. இப்படி சொன்னாரா.. இதைப் பாருங்க.. அதை யோசிங்க.. என்றெல்லாம் சிலர் உருட்டிக் கொண்டிருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது ரஜினியே வராமல் போனாலும் கூட இவர்கள் விட மாட்டார்கள் போல.. அதாவது ரஜினியை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போல.
அறிக்கை
இப்பவும் கூட பாருங்க தமிழருவி மணியன் நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதை படிக்கும் யாருக்குமே, ஏன் இவர் இப்படி ரஜினியின் அறிவிப்பை வைத்து இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்... அரசியலை விட்டு இவருதான் போவதாக கூறியிருந்தார். இனி வர மாட்டேன் என்றும் கூட சொல்லியிருந்தார்.. ஆனால் இப்போது ஏன் இப்படிப் பேசுகிறார். ரசிகர்களை திசை திருப்பப் பார்க்கிறாரா என்று அடுக்கடுக்காக கேள்விகள் எழுகின்றன. உண்மையில் மக்களையும், ரஜினி ரசிகர்களையும் திசை திருப்பும் வேலை போலத்தான் இதை பார்த்தால் தெரிகிறது... அந்த அறிக்கையில் தமிழருவி மணியன் சொன்னதை வைத்து ஒரு அலசல் செய்வோம்...
தமிழருவி மணியன்
"காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொள்கின்றனர்" இது தமிழருவியார் கூற்று. இதற்கு முன்பு யாருமே காந்திய மக்கள் இயக்கத்துடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்ததாக நினைவில்லை. இப்போது மட்டும் எப்படி முன்வருவார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதாவது ரஜினியே அரசியலுக்கு வரவில்லை என்று கூறி விட்ட பின்னர் காந்திய மக்கள் இயக்கத்துடன் எப்படி ரஜினி ரசிகர்கள் இணைவார்கள் என்பது இயல்பான கேள்வியாக உள்ளது.
மக்கள் மன்றம்
"நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவுமில்லை".. இதுவும் குழப்புகிறது. அதாவது அரசியலுக்கு நான் வரவில்லை என்ற ரஜினி அறிவித்த கையோடு, எங்கு வேண்டுமானாலும் போய் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அவரது மன்ற தலைவர் சுதாகர் அறிவிக்கிறார்.
ரஜினிகாந்த்
எதிர்காலத்தில் வர விரும்பும் ஒருவர் இப்படி தனது ரசிகர்களை மடை மாற்றத் துணிவாரா என்பது ஒரு சிந்தனை. அடுத்து. மன்றத்தை கலைக்கவில்லை என்று சொல்கிறார் தமிழருவியார்.. மன்றத்தை எதற்காக கலைக்க வேண்டும். அது ரசிகர் மன்றம்தானே.. அதை எப்படி ரஜினி கலைப்பார்.. நடிப்பை விட்டால் கூட இதைப் பற்றிக் கேட்கலாம். ஆனால் அவர்தான் நடிப்பை விடவில்லையே.. பிறகு ஏன் மன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று புரியவில்லை.
அநாகரீகம்
"ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன்.".. இது அடுத்த குழப்பம்.. எங்கு வேண்டுமானாலும் போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள் என்றி சுதாகரே அறிவித்து விட்ட பிறகு மன்றத்தினர் பிற இடங்களுக்குப் போகத்தானே செய்வார்கள்.. ரஜினியே அதை அனுமதித்து விட்ட பிறகு ஏன் ரஜினி ரசிகர்களின் அநாகரீகம் என்று தமிழருவியார் பேசுகிறார் என்று புலப்படவில்லை.
வலை
"நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் விலகி இருந்தாலும் பக்திபூர்வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் எந்த மன்ற உறுப்பினரும் எவர் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள்".. இதுதான் இடிக்கிறது.
தொந்தரவு
ரஜினியே வர மாட்டேன் என்று கூறிய பிறகும் அதில் உள்நோக்கம் பார்த்து புது அர்த்தம் கண்டுபிடித்து தமிழருவியார் கூறியிருப்பதாகவே நினைக்க தோன்றுகிறது. என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூட ரஜினி கூறி விட்டார். அப்படி இருந்தாலும் தமிழருவியார் போன்றோர் தொடர்ந்து ரஜினியை "மன ரீதியாக" தொந்தரவு செய்வது போல இந்த அறிக்கையின் தொணி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்... ஆனால் ஒன்று, ரஜினியாக நடிப்பதை விட ரஜினியாக இருப்பதுதான் ரொம்ப கஷ்டம் போல!