ஜூலை 12 வெளியாகும் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை.. புதிய முயற்சிக்கு ஆதரவு கிட்டும் என நம்பிக்கை
சென்னை: ஜூலை 12-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தனது தமிழாற்றுப்படை நூல் வெளியிடப்படும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழாற்றுப்படை நூலை திமுக தலைவர் ஸ்டாலின், அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராசர் அரங்கத்தில் வெளியிட உள்ளார்.
தமிழாற்றுப்படை நூலின் முதல் பிரதியை முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் பெற்று கொள்வார் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மேலும் தமிழாற்றுப்படை குறித்த ஒலிநூலை வைகோ வெளியிடவுள்ளதாகவும் கூறினார். தான் எழுதிய 17 நூல்களை கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ளதாக வைரமுத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் பேசிய அவர் எந்த கலைஞனையும் விட ஒரு படைப்பாளனுக்கும், எழுத்தாளனுக்கும் கவிஞனுக்கும் தான் ஊடகங்கள் மிக மிக நெருக்கமாக இருப்பதாக கூறினார். ஒரு படைப்பு என்பது ஒரு காலத்தில் பனை ஓலை, பட்டையம் உள்ளிட்டவற்றில் எழுதப்பட்டது. பின்னாளில் காகிதத்தில் எழுதப்பட்டது,
எந்த ஒரு படைப்பும் புது ஊடகங்களுக்கு வரும் போது தான் அது பொதுவுடமையாகிறது. எங்கள் முன்னோர்கள் எங்களை விட பெரும் அறிவுடையவர்களாக திகழ்ந்தனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிட்டாத பெருமை, ஊடகங்கள் மூலமாக, இந்த நூற்றாண்டை சேர்ந்தவர்களுக்கு கிடைத்துள்ளது என்றார்.
மேலும் பேசிய வைரமுத்து தனது தமிழாற்றுப்படை நூலானது ஒரே நேரத்தில் விழிகளுக்கும், செவிகளுக்கும் விருந்து படைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது 37 படைப்புகளுக்கு கிடைக்காத ஒரு நவீனத்துவம் 38-வது படைப்பான தமிழாற்றுப்படைக்கு, கிட்டியிருப்பதாக கூறினார்.
சுமார் 3 மாதங்கள் செலவழித்து தமிழாற்றுப்படை நூலை தன் குரலாலேயே வாசித்து ஒலிப்பதிவு செய்துள்ளதாக கூறினார். யாருடை குரலாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படும் தானே தொடர்ந்து கேட்டால். எனவே தமிழாற்றுப்படை நூல் பக்கங்களை வாசித்துள்ள போதும், கேட்பவர்களுக்கு இடையில் சலிப்பு தட்டாமல் இருக்க மெல்லிசையை தவழ விட்டுள்ளதாக கூறினார்.
இந்த ஒலிநூலானது 12 மணி நேர கால அளவை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த புதிய முயற்சிக்கு தமிழ் உலகம் தமக்கு ஆதரவளிக்கும் என நம்புவதாக கூறினார் வைரமுத்து.