அரசு மருத்துவமனைகள்.. இந்த வருட அவலத்திற்கு.. போன திமுக ஆட்சியையும் சேர்த்து விமர்சிக்கும் தமிழிசை!
அரசு மருத்துவமனையின் அவலத்துக்கு திமுகவும் காரணம் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வெளியிட்ட இந்த அறிக்கைக்கு என்ன காரணமோ தெரியவில்லை.
தமிழகத்தில் நான்கைந்து நாட்களாக தவறுதலாக ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரமும், அதனையொட்டி ஏற்பட்ட மரணமும் பெரும் தாக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்காக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை மக்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
மற்றொரு புறம் அத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியிருந்து நீக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்கமாகவே சொல்லிவிட்டார். எனவே ஆளும் தரப்பு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் தமிழிசை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 2 விஷயங்களை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்.
கவனக்குறைவு
ஒன்று, "ஏதோ அங்கொன்றும்,இங்கோன்றும் ஏற்படும் தனிப்பட்ட சிலரது கவனக்குறைவால், அலட்சியத்தால் நடக்கும், மருத்துவ துறை சார்ந்த விபத்துகள் பூதாகரமாக சித்தரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படுத்தும் அளவிற்கு சில அரசியல்வாதிகள் போட்டி போட்டுகொண்டு வீண் புரளிகளைப் பரப்ப துணைபோவது நாட்டிற்கும்,பொதுமக்களுக்கும் நல்லதல்ல" என்று என்று கேட்டு கொண்டுள்ளார்.
பொறுப்பேற்க வேண்டும்
மற்றொன்று விஷயம், "அரசு மருத்துவமனைகள் தீராத அவலங்களுக்கு கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த திமுகவிம் பொறுப்பு அல்லவா? பல்லாண்டு காலமாக தீர்க்கப்படாமல் பல்வேறு அரசு மருத்துவமனை பிரச்சினைகளுக்கு இதுவரை தமிழகத்தை பலமுறை ஆண்ட திமுகவும் பொறுப்பேற்கவேண்டும்.
அவநம்பிக்கை
அரசியல் தலைவர்கள் வீம்பு அரசியலுக்காக அரசு மருத்துவமனைகளின் மீது அவ நம்பிக்கையை மக்கள் மீது ஏற்படுத்த வேண்டாம்'' என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவநம்பிக்கை பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களின் நலனுக்காகவே தமிழிசை இதில் கருத்து கூறியிருந்தாலும், அதிமுகவை தவறு சொன்னால் பாஜகவுக்கு ஏன் கோபம் வருகிறது என்று தெரியவில்லை.
கூட்டணி பின்னணியா?
கண்ணெதிரே நடந்த ஒரு அஜாக்கிரதைக்கு, போன ஆட்சியில் இருந்த திமுகவை வம்புக்கு இழுக்க காரணமும் புரியவில்லை. தமிழிசையின் இந்த ஆதங்கம் "கூட்டணி" தரப்பினருக்கு மீண்டும் ஆதரவு கரம் நீட்டவா? அல்லது தானும் ஒரு டாக்டர் என்ற முறையிலா என்றும் குழப்பமாகவே உள்ளது.