தூத்துக்குடியில் களம் குதிக்கிறார் தமிழிசை.. கனிமொழி, ராதிகாவை எதிர்த்து புயல் கிளப்ப தயாராகிறார்
Recommended Video
சென்னை: அங்க சுத்தி... இங்க சுத்தி... கடைசியில கனிமொழியை நேருக்கு நேராக எதிர்க்க முடிவு செய்துவிட்டார் போலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்!! ஆம் தூத்துக்குடியில் களம் இறங்க போவதாக தகவல்கள் சூடாக வர ஆரம்பித்துள்ளன.
தூத்துக்குடி தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்று கனிமொழி 3 வருடத்திற்கு முன்பே முடிவு செய்துவிட்டார்.
வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பேயே தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் அங்கு பிரசார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர அங்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி சென்று வந்து ஏகப்பட்ட களவேலைகளையும் செய்து தயாராக வைத்திருக்கிறார்.
நாடார் சமூகம்
இந்நிலையில் பாஜகவுக்கு 5 சீட் உறுதியாகிவிட்டது. இதில் தமிழிசை தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாடார் சமூகத்தின் ஓட்டுக்கள் தமிழிசைக்கு பெரும்பாலும் விழும் என்பதே பாஜகவின் கணக்கு.
ராதிகா
இதே கணக்கில்தான் கனிமொழியும் களமிறங்க போகிறார். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமாரும் களமிறங்க போகிறார். சரத்குமார் ஓட்டு கேட்க வரும்போதெல்லாம் ராதிகா தூத்துக்குடி மக்களை சந்தித்தும் பேசியும் வந்ததால், நன்கு பரிச்சயம். மேலும் தொகுதியின் கிராம பகுதிகளில் அன்றிலிருந்து இன்றுவரை சீரியல் மழுங்கி உள்ள பெண்களின் ஆதரவு ராதிகாவுக்கு நிறையவே உள்ளது. அதனால் இந்த மூவருக்குமே சாதிய ரீதியான ஓட்டுக்களில் பெரும் குழப்பமும் திணறலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரம்
ஆனால் இது ஒரு சாதகத்தை தவிர தமிழிசைக்கு தூத்துக்குடியில் வெற்றி பெறுவது எந்த அளவுக்கு சாத்தியம் என தெரியவில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தால் அதிமுக, பாஜக மீதான அதிருப்தி இன்னமும் மக்களுக்கு குறையாமல் உள்ளது தமிழிசைக்கு மிகப்பெரிய மைனசாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதைத்தவிர தமிழிசை தூத்துக்குடியில் போட்டியிடக்கூடாது என்று அதிமுகவின் ஒரு தரப்பினர் சொல்லி வருவதாகவும் மற்றொரு தகவல் வந்து கொண்டிருக்கிறது.
நட்சத்திர வேட்பாளர்கள்
எப்படி பார்த்தாலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் எல்லாம் பலமானவர்கள்தான்.. நட்சத்திர பெண் வேட்பாளர்கள்தான்.. 3 பெண் வேட்பாளர்கள் மோதுவது ஆரோக்கியமான போட்டிதான்.. ஜெயிக்க போவது யாரு என்பதுதான் ஆயிரமாயிரம் கேள்வியே!