ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார் ஸ்டாலின்.. தமிழிசை கண்டனம்
மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி தந்துள்ளார்.
Recommended Video
சென்னை: சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார் ஸ்டாலின் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சாடி உள்ளதுடன், இந்த ஆபத்தான விளையாட்டு என்றும் ஸ்டாலினுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொளத்தூரில் திமுக சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோது, பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
குறிப்பாக "சிறுபான்மையின மக்களுக்கு திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. சிறுபான்மையினர் சமூதாய எதிரியாக, சிறுபான்மையின சமூகத்திற்கு விரோதமாக செயல்படக்கூடிய ஓர் ஆட்சி மத்தியில் நடந்து கொண்டிருக்கும் பாஜக ஆட்சி. அந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம்.
கிறிஸ்துமஸ் உறுதிமொழி
அந்த ஆட்சிக்கு உறுதுணையாகவும், அந்த ஆட்சிக்கு அடிமையாகவும் தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சி நடந்து வருகிறது. அதனால் இந்த இரண்டு ஆட்சிகளை அப்புறப்படுத்துவதற்கு, இந்த கிறிஸ்துமஸ் திருநாளில் நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
அறிக்கையின் சாராம்சம்
ஸ்டாலினின் இந்த பேச்சிற்குதான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், ஸ்டாலினுக்கு எதிராக பல கேள்விகளையும் அதில் எழுப்பி உள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் சாராம்சம் இதுதான்:
மதவெறி விஷம்
"கிறிஸ்துமஸ் விழா என்ற பெயரில் பிரதமருக்கு எதிராக பேசுவதாக கூறி சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார் ஸ்டாலின். இதுதான் நீங்கள் பேசும் மதச்சார்பின்மையா? எங்களை மதவாத கட்சி என்று முத்திரை குத்தும் நீங்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக கிறிஸ்துமஸ் விழாவில் நின்று கொண்டு மதவெறி விஷம் பரப்பும் கருத்துக்களை கூறுவது என்ன நியாயம்?
|
ஆபத்தான விளையாட்டு
பாஜக ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு விரோதமான ஆட்சி என்கிறீர்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக என்ன விரோத நடவடிக்கைளை மேற்கொண்டது என்பதை என்னுடன் விவாதிக்க தயாரா? பிரதமர் மோடி அரசுடன் கிறிஸ்தவ மக்கள் இணக்கமாக இருந்துவிட்டால் நமக்கு ஆபத்து என்று வாக்கு வங்கி அரசியலுக்காக கிறிஸ்துமஸ் விழாவில் மக்களிடம் மதவெறியை தூண்டி வன்முறைக்கு வழிவகுக்கிறீர்கள். வேண்டாம், இந்த ஆபத்தான விளையாட்டு.
பிராமணன் பூணூல்
பிரதமர் மோடியை மதவாதி எனக்கூறும் நீங்கள் தேர்தலுக்காக கோயில் கோயிலாக சென்று நானும் இந்து பிராமணன் பூணூல் அணிகிறேன் என்று பேசிய ராகுல் காந்தியை வேண்டாம் இந்த போலி வேஷம் என்று கண்டிக்கும் தெம்பும், திராணியும் உங்களுக்கு உண்டா? தொடர்ந்து ஓட்டு வங்கி அரசியலுக்காக மதவெறி பரப்புவது, சிறுபான்மை மக்களை பிரிப்பது நீங்களும் காங்கிரசும்தான்" என்று காட்டமான கேள்விகள் நிறைந்த வரிகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.