கரிசல் மண்ணை அப்புறப்படுத்தி தாமரையை மலர செய்வோம்.. தமிழிசை பதிலடி
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கரிசல் மண்ணை அப்புறப்படுத்தி தாமரையை மலரச்செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தாமரை என்ற வார்த்தைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் முதல் ஆளாக வந்து அதற்கு தக்க பதிலை பதிவிட்டு விடுகிறார் தமிழிசை.
ஏற்கனவே தமிழகத்தில் தாமரை மலராது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒருபுறமும், மலர்ந்தே தீரும் என்று அதற்கு தமிழிசை மறுபுறமும் மாறி மாறி பதில்களை அளித்து ட்விட்டர் போர் வலுத்து வருகிறது.
திமுக கூட்டணி
இந்த பிரச்சனை ஆரம்பித்தது என்னவோ மேகதாது விஷயமாகத்தான். ஆனால் அது இப்போது மழை, தாமரை, சூரியன், கரிசல் மண் என்று தீராமல் போய் கொண்டே இருக்கிறது. திருச்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேகதாது விஷயத்தில் ஒன்றுபடாத கட்சிகளான குறிப்பாக பாஜக தலைவர்களை திமுக கூட்டணி தலைவர்கள் கடுமையாக சாடியே பேசினர்.
செயற்கை மழை
இதற்கு ட்விட்டரில் தமிழிசை, ''இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்" என்று தெரிவித்தார்.
தாமரை கருகும்
தமிழிசையின் இந்த ட்வீட்டுக்கு ஸ்டாலின் பதில் ட்வீட் போட்டார், அதில் "சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!" என்று கூறியிருந்தார்.
சுப.வீரபாண்டியன்
இந்த நிலையில், நேற்று திருச்சியில் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சுப.வீரபாண்டியனும், "தாமரை மலரும் என்ற கனவு கருகிப் போயிருக்கிறது. கரிசல் காட்டில் கரும்பு வளராது. தமிழ் மண்ணில் தாமரை மலராது" என்று பேசியிருந்தார். இதற்குதான் தமிழிசை சவுந்தராஜன் தற்போது பதிலளித்துள்ளார்.
கரிசல் மண்
சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கரிசல் மண்ணில் தாமரை மலராது என்று பேசபட்ட கருத்துக்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு "தமிழகத்தில் கரிசல் மண் இருக்கும் என்றால் அவற்றை அப்புறப்படுத்தியாவது தமிழகத்தில் தாமரையை மலரச்செய்வோம்" என்ற பதிலடியை நம்பிக்கையுடன் தமிழிசை தெரிவித்தார். மேலும் மதரீதியான எந்த உணர்வுகளையும் பாஜக தூண்டவில்லை. எதிர்க்கட்சிகள்தான் அப்படி செய்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.