அதில் நான் உடன்படுகிறேன்.. சி.வி.சண்முகம் பேச்சுக்கு தமிழிசை தடாலடி ஆதரவு!
சி.வி. சண்முகம் கருத்தை வரவேற்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை: அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இறந்து 2 வருஷங்கள் ஆகிவிட்டது. இது சம்பந்தமாக விசாரணை கமிஷன் நியமிக்கப்படும் வருடங்கள் ஓடிவிட்டன. கமிஷனின் விசாரணையும் இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்த நேரத்தில் வந்து அமைச்சர் சிவி சண்முகம், "மருத்துவமனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? என்று கேள்வி எழுப்பிய அவர், ஜெயலலிதாவுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார்.
பகிரங்க புகார்
அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் செய்யவில்லை? செய்யவேண்டாம் என சொன்னது யார்? ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை தடுத்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
1 கோடி ரூபாய்
மாநில சட்ட அமைச்சரே இப்படி பகீர் புகார் கூறியுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோதாதென்று, சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ 1 கோடிக்கு மேல் செலவு வந்தது என்று அமைச்சர் ஜெயக்குமாரும் தெரிவித்துள்ளார்.
ஒரே நாள் - 2 அமைச்சர்கள்
இப்படி ஒரே நாளில் இரு அமைச்சர்கள் இத்தனை குற்றச்சாட்டுகள் சொல்லுகிறார்கள் என்றால், அதற்கேற்றார்போல், தமிழிசை சவுந்தராஜனும் சிவி சண்முகம் கருத்தினை ஆமோதித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அரசியல் அழுத்தம்
"அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. வெளிநாட்டுக்கு கொண்டு சென்று ஆஞ்சியோ செய்திருந்தால் சில அரசியல் அழுத்தங்களிலிருந்து விடுபட்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருக்க முடியுமோ என்னவோ?"- என்று பதிவிட்டுள்ளார். இவ்வளவு நாள் கழித்து அதிமுக அமைச்சர்கள்தான் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள் என்றால், தமிழிசை சவுந்தராஜன் ஏன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தார்? என்ற சந்தேகம் எழுகின்றது.
ஆஞ்சியோ சிகிச்சை
அப்போலோ ஆஸ்பத்திரியில் உலகத்தரம் வாய்ந்த எல்லா வசதிகளும் இருக்கும்போது ஆஞ்சியோவுக்கு சிறந்த சிகிச்சை இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. அதோடு, எய்ம்ஸ் மருத்துவக்குழுவை அப்போலோவுக்கு அனுப்பி வைத்ததே மத்திய அரசுதான் என்கிறபோது, அந்த மருத்துவ குழு மீது தமிழிசைக்கு நம்பிக்கை இல்லையா?
சந்தேகங்கள்
கட்சி வேறு என இருந்தாலும், ஒரு மருத்துவர் என்ற முறையில் இதெல்லாம் அன்றைக்கே தமிழிசைக்கு தெரியாதா? என்பன போன்ற சந்தேகங்கள் நிறைந்த கேள்விகள் எழுந்து செல்கின்றன. ஏற்கனவே அமைச்சர்கள் இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு, இன்று வந்து ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று தமிழக மக்கள் விழித்துகொண்டிருக்கும்போது, தமிழிசையின் ஆதரவு தரும் கருத்து மேலும் மக்களை குழப்பிதான் விடுகிறது.