ப்பா.. பயங்கர பதட்டமா இருக்காங்களே.. எதிர்க்கட்சிகளை கலாய்க்கும் தமிழிசை!
தேமுதிக நிச்சயம் எங்களுடன் வந்து இணைவார்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை: எதிரணியினர் பயங்கரமான பதற்றத்தில் இருக்கிறார்கள், அமித்ஷா பேசியதை வைத்து எங்க போய் என்ன பிரச்சனையை குழப்பலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்று தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
பழங்களும் பழுத்துக்கொண்டுதான் இருக்கிறது, மலர்கள் மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் மகிழ்ச்சியுடன் தமிழிசை மேலும் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட உஷ்ணத்தில் தகித்து கொண்டிருக்கிறது. இதில் அதிமுக அணியில் கூட்டணி வைத்துள்ள பாஜக 5 சீட்டுகளை பெற்றுவிட்டது.
தமிழிசை பேட்டி
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:
தொகுதி பங்கீடு
மோடி தமிழகம் வரபோகிறார். இன்னும் தேதி முடிவாகவில்லை. அது விஷயமாகத்தான் சந்தித்து பேசினேன். கூட்டணி பேச்சுவார்த்தையை பொறுத்தவரை, கூட்டணியில் தொகுதி பங்கீடு இருக்கும். ஆனால் எதிரணியில் பயங்கரமான பதற்றத்தில் இருக்கிறார்கள். அமித்ஷா பேசியதை வைத்து எங்கே போய் எங்க குழப்பலாம் என்று பெரிய விவாதமே நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
மோடி தலைவர்
இயல்பாகவும் அன்பாகவும் அனுசரணையாகவும் பேசியது அது. ஒவ்வொருவருக்கும் ஒரு மேனரிசம் இருக்கும், அதை வைத்து முடிவு செய்யக்கூடாது. அதை வைத்து அமித்ஷா மேலே பேசுகிறார், ஓபிஎஸ் பணிந்து போகிறார். இப்படியெல்லாம் ஒன்னுமே இல்லை. தேசிய அளவில் மோடி தலைவர். அதேபோல தமிழகத்தில் அதிமுக பிரதான கட்சி. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. அவ்வளவுதான்" என்றார்.
இழுபறி இல்லை
தேமுதிக கூட்டணி பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தோழமையுடன் பேச்சுவார்த்தை தேமுதிகவில் நடந்து வருகிறது. ஒரு இழுபறியும் கிடையாது. விரைவில் எங்களுடன் கூட்டணியில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
பேச்சுவார்த்தை
பிறகு எதற்காக முக ஸ்டாலின், திருநாவுக்கரசர் எதற்காக போய் விஜயகாந்த்தை சந்தித்தார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, "எல்லாருமே நலம் விசாரிக்கதான் போனார்கள். நலம் விசாரிக்க போவது என்பது வேறு, பேச்சுவார்த்தைக்கு போவது என்பது வேறு. சந்திப்பு நடந்தது தேர்தலுக்காக இல்லை.. உடல் தேறுதலுக்கான சந்திப்பு அது.
விரைவில் மலரும்
தேமுதிகவினர் தேசப்பற்று உள்ளவர்கள். அதனால் மோடியைத்தான் தலைவராக ஏற்பார்கள். விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு விரைவில் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பழங்களும் பழுத்துக் கொண்டுதான் இருக்கிறது... மலர்கள் மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது... மகிழ்ச்சியாக வெற்றியையும் மலரத்தான் செய்யப் போகிறோம்" என்று தமிழிசை பதிலளித்தார்.