மீண்டும் மோடி.. கருணை காட்டு தாயே.. பச்சை கலர் புடவையில் "அம்மா"விடம் உருக்கமான கோரிக்கை
தமிழிசை சவுந்தராஜன் காஞ்சிபுரம் கோயிலில் தரிசனம் செய்தார்.
சென்னை: பளபள பச்சை கலர் புடவை, குங்குமம், கழுத்தில் மாலை, கையில் பால்குடம் என பக்தி பழமாகவே உருமாறி அந்த போட்டோவில் நின்று கொண்டிருந்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன்!
தமிழகத்தில் அதிமுக-பாமக-பாஜக என கூட்டணி உருவாகிவிட்டது. இதனால் அக்கட்சியினர் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள்.
அதிமுக-பாமக கறி, மீன் என்று விருந்து வைத்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர். பாஜக தரப்பில், எச்.ராஜா, அமித்ஷா போன்றோர் ட்வீட்களை போட்டு தங்கள் குஷியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் ஒருபடி மேல போய் அம்மனுக்கு பால் குடமே எடுத்துவிட்டார் தமிழிசை சவுந்தராஜன்.
தமிழிசை
அடிப்படையிலேயே ரொம்பவும் கடவுள் பக்தி நிறைந்தவர் தமிழிசை. பூர்வீகம் கன்னியாகுமரியாக இருந்தாலும், திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில்தான் இவரது குலதெய்வம் உள்ளது. குடும்ப காரியங்களையும் தாண்டி பாரத பிரதமருக்காக இந்த குலதெய்வம் கோவிலில் சமீபத்தில்கூட வழிபாடு செய்தார் தமிழிசை.
பிரதமர் மோடி
இப்போது திரும்பவும் மோடியே பிரதமராக வேண்டும் என்று அம்மனிடம் வேண்டி கொண்டுள்ளார். இதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு தமிழிசை வந்து தரிசனம் செய்துள்ளார். இது சம்பந்தமான ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.
போட்டோ
அதில், "காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசித்து நல்லாட்சியின் நாயகன் மீண்டும் மோடி அவர்கள் ஆட்சி அமைய அம்மனிடம் தரிசனம் செய்துவிட்டு வந்தேன்." என்று தெரிவித்துள்ளார். கூடவே, ஒரு போட்டோவையும் போட்டுள்ளார்.
கழுத்தில் மாலை
பச்சை கலர் பட்டுப்புடவை, கழுத்தில் மாலை, நெற்றி நிறைய குங்குமம், கையில் பால்குடத்துடன் தமிழிசை நின்று கொண்டிருக்கிறார். சுற்றிலும் நிறைய பெண்களும் பால்குடம் ஏந்தி நிற்கின்றனர்.
|
அக்கறை
தமிழிசையின் இந்த ட்வீட்டுக்கு கீழே நிறைய கமெண்ட்கள் குவிந்து வருகிறது. "அக்கா, சாமியெல்லாம் வந்து ஓட்டு போடாது. மக்கள மதிச்சா, அவங்க மேல அக்கறை செலுத்தினா ஓட்டு தானா விழும்" என்றும், "பழனிக்கே பால் காவடி தூக்குனாலும் சரி ஒரு இன்ச் கூட நகராது" என்றும் கமெண்ட்கள் குவிகின்றன.