சுத்தம்.. தமிழிசை கணவரிடமே ரூ. 50,000 பணத்தை ஆட்டையைப் போட்ட மர்ம ஆசாமிகள்
சென்னை ஏர்போர்ட்டில் பாஜக தலைவர் தமிழிசை கணவர் சவுந்தராஜனின் பணம் மாயமாகி உள்ளது.
சென்னை: சுத்தம்... தமிழக பாஜக தலைவர் கணவரிடமே மர்ம நபர்கள் ஆட்டைய போட ஆரம்பித்துவிட்டார்கள் போல.
தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தராஜன் ஒரு புகழ்பெற்ற டாக்டர் ஆவார். சிறுநீரக மருத்துவ துறை நிபுணரும்கூட.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர் என்ற பெருமையை பெற்றதுடன், ஏராளமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக செய்தவரும் ஆவார்.
விஜயகாந்த்
நடிகர் ரஜினிகாந்த், மறைந்த தலைவர்கள் ஜானகி ராமச்சந்திரன், மூப்பனார் ஆகியோருக்கு இவர்தான் சிகிச்சை அளித்தவர். இப்போது விஜயகாந்துக்கும் இவர்தான் சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில், சவுந்தரராஜனின் 50 ஆயிரம் பணம் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
50 ஆயிரம் ரூபாய்
மருத்துவ பணி நிமித்தமாக கடந்த 11-ம் தேதி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்புவுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது துணிக்குள் ரூ.50 ஆயிரம் பணத்தை வைத்து சூட்கேசில் எடுத்து சென்றதாகவும், ஆனால் கொழும்புக்கு சென்று பார்த்தபோதுதான் லக்கேஜில் இருந்த பணம் மாயமாகி உள்ளதாகவும் சவுந்தரராஜனுக்கு தெரியவந்திருக்கிறது.
போலீசில் புகார்
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுந்தராஜன் சென்னை திரும்பினார். உடனடியாக இது குறித்து விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சென்னை விமான நிலையத்தில்தான் லக்கேஜ் பையில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
பரபரப்பு
புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இருந்தாலும், தமிழிசையின் கணவர் சவுந்தரராஜனின் பணம் ஏர்போர்ட்டில் காணாமல் போனது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.