எப்படியும் கூட்டணி உறுதி என்கிறார் தமிழிசை.. அப்ப கூட்டு சேர போவது யாரு??
வரும் ஜனவரி மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை: எப்படி பார்த்தாலும் பாஜக கூட்டணி அமைத்துதான் போட்டி இடும் என்று தமிழிசை சவுந்தராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது போன்ற சூழல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல, திமுகவுக்கு பாஜகவுக்கும் ஆகாது என்றும் தெரியும், காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் ஜென்ம பகைதான்!
வெட்ட வெளிச்சம்
அமமுகவுக்கும் பாஜகவை ஆகாது. திமுக கூட்டணி கட்சிகளை தவிர மிச்சம் இருப்பதை பார்த்தால், தேமுதிகதான். அது இப்போதுதான் தட்டு தடுமாறி மேலே வந்து கொண்டிருக்கிறது. கமலை பொறுத்தவரை பாஜக இல்லை என்பது வெட்ட வெளிச்சமான விஷயம். தொத்தி இருப்பது பாமகதான்! அதற்கேற்றபடி பாமகவும் இதுவரை வாய் திறக்கவில்லை.
நிச்சயம் கூட்டணிதான்
இந்தநிலையில் தமிழிசை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, "பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயமாக இருக்கும். அதில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்பதை இப்போதே சொல்வது சரியாக இருக்காது. அடுத்த மாதம் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பிப்போம். ஆனால் கூட்டணி நிச்சயம் இருக்கும்" என்று சொல்லி உள்ளார்.
3 இடங்களில் பிரச்சாரம்
கூட்டணி வைத்துதான் போட்டி என்றால் தமிழிசை சொல்வது, பாமகவைதானா? என்று தெரியவில்லை. அடுத்த மாதம் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்கிறார். மோடிதான் அடுத்த மாதம் தமிழகம் வர இருக்கிறார். 3 இடங்களில் பிரச்சாரமும் செய்ய உள்ளார்.
சஸ்பென்ஸ்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட போவதாகவும் கூறப்படுகிறது. மோடி தமிழகம் வருகையை மனதில் வைத்துதான் அடுத்த மாதம் கூட்டணி பேச்சுவார்த்தை என்று தமிழிசை சொல்வது பட்டவர்த்தமான தெரிந்தாலும், கூட்டணி விஷயத்தில் மட்டும் சஸ்பென்ஸ் இன்னமும் தொடர்கிறது.