டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள டான்செட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வரும் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளான எம்.பி.ஏ எம்.சி.ஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு, டான்செட் நுழைவுத்தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க கடந்த 8-ம் தேதி முதல் அவகாசம் அளிக்கப்பட்டது.
டான்செட் நுழைவுத்தேர்வு எழுத www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது
இத்தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவுற்றது. இந்நிலையில் 31-ம் தேதி வரை அவகாசத்தை நீடித்து அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு ஜூன் 22-ம் தேதி காலை 10 மணிக்கும், எம்பிஏ படிப்புகளில் சேர அன்று பிற்பகல் 2.30 மணிக்கும் டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் படிப்புகளுக்கு ஜூன் 23-ம் தேதி காலை 10 மணிக்கு டான்செட் தேர்வு நடைபறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வரை எம்பிஏ படிக்க 16,427 பேரும், எம்சிஏ படிக்க 4,672 பேரும், எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் படிக்க 10,288 பேர் என மொத்தம் 31,387 பேர் விண்ணப்பித்திருந்ததாகக அண்ணா பல்கலைகழகம் கூறியுள்ளது