"இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும்.." மெசேஜ் வந்தால் என்ன செய்யணும்! புதுவித மோசடி.. நம்பாதீங்க
மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி பெரியளவில் மோசடி நடந்து வருவதாக மின்வாரியம் எச்சரித்துள்ளது.
சென்னை: உடனடியாக பணத்தை அனுப்பவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி மிகப் பெரியளவில் மோசடி நடந்து வருவதாக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி விவாசியகள், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர மேலும் சில மானியங்களும் உள்ளன. இப்போது தமிழ்நாடு முழுக்க இருக்கும் வீடுகள், வணிக நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
விரைவில் குறையும் மின் கட்டணம்? மாதம்தோறும் மின் கட்டணம் எப்போது! செந்தில் பாலாஜி முக்கிய தகவல்
ஆதார் இணைப்பு
மானிய மின்சாரம் பெறுவோர் ஆதாரே எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர்.. ஏற்கனவே இரண்டு முறை இதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்ட நிலையில், இப்போது வரும் பிப்.. 15ஆம் தேதிக்குள் ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனியும் கடைசி தேதி நீட்டிக்கப்படாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
திடீரென வரும் மெசேஜ்
இதற்கான பணிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் மின் நுகர்வோரைக் குறிவைத்து மோசடி அரங்கேறி வருகிறது. தமிழ்நாட்டில் இப்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இதைக் குறிவைத்துத் தான் சிலர் மோசடிகளில் இறங்கியுள்ளனர். இவர்கள் மின் நுகர்வோருக்கு மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மெசேஜ்களை அனுப்புகின்றனர்.
கட்டணம் செலுத்துங்கள்
அதில் அவர்கள் அனுப்பும் மெசேஜ்சில், "கடந்த மாத மின் கட்டண தொகை இன்னும் எங்கள் சிஸ்டத்தில் அப்டேட் ஆகவில்லை.. இதன் காரணமாக உங்கள் மின் இணைப்பு இன்று இரவே துண்டிக்கப்படும். இதைத் தடுக்க வேண்டும் என்றால் உடனடியாக எங்கள் மின்சார வாரிய அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும். அல்லது நீங்கள் கட்டணம் செலுத்திய விவரங்கள் அல்லது பில் விவரங்களை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
நம்ப வேண்டாம்
மின் நுகர்வோருக்கு வாட்ஸ்அப் மற்றும் மெசேஜ்மூலம் இந்த செய்திகளை சில விஷமிகள் பரப்பி வருகின்றனர். இதை நம்பி அந்த நம்பரை தொடர்பு கொண்டால்.. அவர்களிடம் லாவகமாகப் பேசி பணத்தை மோசடி செய்துவிடுகிறார்கள்.. இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் பரவலாக நடக்கத் தொடங்கியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதனிடையே இது குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
அனுப்பக் கூடாது
அதாவது சிலர் இதுபோன்ற பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பி மோசடி செய்வதாகவும் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப் மூலம் வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற குறுந்தகவல்களை மின் பகிர்மான கழகம் அனுப்புவதில்லை என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் விளக்கமளித்துள்ளது.
பில் எப்படி செலுத்தலாம்
மேலும், மின் நுகர்வோர் மின் கட்டணத்தைச் செலுத்த விரும்பினால் மின் அலுவலகத்தில் செலுத்தலாம்.. அல்லது மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செலுத்தலாம்.. இது தொடர்பாக மின் துறை ஊழியர் என்று உங்களை மொபைல் மூலம் அல்லது வாட்ஸ்ஆப் மூலம் அணுகினால் அவர்களை நம்பக் கூடாது என்றும் மின்துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.