கால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்
சென்னை: கால் பவுன் நகை விலைக்கு நிகராக டேங்கர் லாரி தண்ணீரின் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் திண்டாட்டத்திலும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எங்கும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் காலிக்குடங்களுடன் தெருதெருவாய் அலையும் காட்சிகளை அன்றாடம் டிவிகளிலும் செய்தித்தாளிலும் பார்த்து வருகிறோம்.
சென்னையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டன.
இப்படி குளித்து.. பல் துலக்கி.. துணி துவையுங்க.. தண்ணீர் பிரச்சினையை விரட்டிவிடலாம்.. சீமான் டிப்ஸ்
சென்னை குடிநீர் வாரியம்
அது போல் சென்னைக்கு தண்ணீர் வழங்கி வந்த செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி உள்ளிட்டவை வறண்டுவிட்டன. இதனால் லாரிகள் மூலம் தண்ணீரை முறையாக வழங்க முடியாத நிலைக்கு சென்னை குடிநீர் வாரியம் திணறி வருகிறது.
மணிக்கணக்கில்
லாரி எப்போது வரும் என மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். சில மக்கள் செப்டிங் டேங்க் கிளீன் செய்யும் லாரிகளை கண்டும் மக்கள் தண்ணீர் லாரி நினைத்து கொண்டு குடங்களை எடுத்து வரும் காட்சிகளையும் நம்மால் காணமுடிகிறது.
துணி துவைக்காமல்
குளிக்காமலும் துணிகளை துவைக்காமல் வாரக்கணக்கில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எத்தனை விலை கொடுத்தாவது தண்ணீரை வாங்க தயாராக உள்ளதாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர். இவர்களின் இந்த அணுகுமுறையை டேங்கர் லாரி உரிமையாளர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.
24 ஆயிரம் லிட்டர்
இதனால் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீரின் விலை ரூ .6000 ஆக விற்கப்படுகிறது. இதே சுத்திகரிக்கப்படாத குடிநீரின் விலை 24 ஆயிரம் லிட்டருக்கு ரூ 3000 விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நாளில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,161 ரூபாயாக உள்ளது. எனவே 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வாங்கும் விலையில் கால் பவுன் நகை வாங்கும் அளவுக்கு நிலை மோசமாக உள்ளது.