ஒரு நாள் தானப்பா கடையை மூடுறாங்க... அதுக்கே இப்படியா.. அதிரவைக்கும் டாஸ்மாக் வசூல்!
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 182 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைகளில் மதுவிற்பனை தாருமாறாக அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
இதனால் சனிக்கிழமையே அதிகப்படியான குடிமகன்கள் கடைகளில் குவிந்து விரும்பியதை வாங்கி குவித்து வருகிறார்கள். இதன் காரணமாக சனிக்கிழமைகளில் மது விற்பனை 150 கோடியை வெகு இயல்பாக தாண்டுகிறது.
மது விற்பனை
மக்களிடம் வறுமை, பசி, பஞ்சத்தை கொரோனா ஏற்படுத்தி வந்த போதிலும், டாஸ்மாக் கடைகளுக்கு செல்லும் காசு மட்டும் கொஞ்சமும் குறையவில்லை என்பதை இந்த வசூல் நிலவரங்கள் காட்டுகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 182 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மின்னல் வேகம்
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 42 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் கொரோனா மின்னல் வேகத்தில் பரவும் நிலையில் மறுபக்கம் தென் மாவட்டங்களில் டாஸ்மாக்களில் குடிமகன்கள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள். இதனால் அங்கு மதுவிற்பனை மிக அதிகமாக உள்ளது.
சொற்ப வருமானம்
தென்மாவட்டங்களுக்கு கொஞ்சுமும் சளைக்காமல் மதுவிற்பனையில் திருச்சி டெல்டா மாவட்டங்கள் உள்ளன. திருச்சி மண்டலத்தில் 41 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலும் பெரியதாக நடைபெறாத சூழலில் தங்களிடம் உள்ள சொற்ப வருமானத்தையும் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கொட்டிவிட்டு வரும் சோகங்கள் பல இடங்களில் அரங்கேறி வருகிறது.
கோவை 37 கோடிக்கு மது விற்பனை
சேலம் மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும் கோவையில் 37 கோடி ரூபாய்க்கும் மது விறப்னையாகி உள்ளதாம். கடைகளில் மிகவும் குறைவாகவே திறக்கப்பட்டுளள சென்னை மண்டலத்தில் (திருவள்ளூர் , காஞ்சிபுரம் , திருவள்ளூர் பகுதிகளில் தான் கடை திறக்கப்பட்டுள்ளது) 21 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
மது விற்பனை
தமிழகத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ள நிலையில் அதில் தற்போது 3ல் 2 பங்கு கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. அப்படிப்பட்ட சூழலிலும் 182 கோடிக்கு மதுவிற்பனையாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சுமார் 3 ஆயிரம் கடைகள் தமிழகம் முழுவதும் இயங்குவதாக கணக்கீட்டால் கூட, ஒரு மது கடைக்கு சராசரியாக 1.36 லட்சம் வசூலாகி இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன