தமிழகத்தில் மீண்டும் களைகட்டிய மதுபான விற்பனை.. அதிர வைக்கும் குடிகாரர்கள்.. எங்கு அதிகம் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை மீண்டும் தாறுமாறாக உயர்ந்தள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் 120 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றும் 100 கோடிக்கு அதிகமாக விற்பனை ஆகி இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போது திருவிழா போல் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அந்த இரண்டு நாட்களில் மட்டும் 295 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்ற காரணமாக 16ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. காலை 11.30 to 3.30 வரை மக்கள் வெளியே செல்ல கூடாது
மூன்று நாளில் ரூ.400 கோடி
16ம் தேதி மட்டும் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. 16 முதல் 19ம் தேதிக்குள் ரூ.402.9 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. ஆனால் செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மதுபானங்கள் விற்பனை என்பது பெரும் சரிவினை கண்டது. கடை நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்ட போதும் மதுக்கடைகளை கூட்டம் இல்லை. வெறிச்சோடி காணப்பட்டது.
ஏன் காற்று வாங்கியது
இதற்கு குடிமகன்கள் அதிகம் விரும்புகின்ற போதிய மதுபானங்கள் இருப்பில் இல்லாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் விலையும் அதிகமாக இருந்தது. பாட்டிலுக்கு கூடுதல் விலை வாங்கியது போன்றவை காரணமாக கூறப்பட்டது. இதற்கிடையே கட்டுப்பாட்டு மண்டலங்கள் குறைய குறைய நிறைய மதுக்கடைகள் மீண்டும் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 80க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
ரூ.120 கோடிக்கு விற்பனை
இதனிடையே மது விற்பனை சனிக்கிழமை முதல் மீண்டும் அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான சனிக்கிழமை ஒரு நாளில் ரூ.120.4 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக சொல்லப்படுகிறது. சென்னை மண்டலத்தில் ரூ.17.2 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.26.8 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.25 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.24.1 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.
மதுரை வசூல் எவ்வளவு
தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.27.3 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்டாக் வட்டாரங்கள் தெரிவித்தன. ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் ரூ.100 கோடிக்கும் அதிகமான மதுபானங்கள் விற்பனையாகி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் விடுமுறை தினங்கள் என்பதால் மதுபான விற்பனை களை கட்டியதாக கூறப்படுகிறது.