12 நாட்கள் லாக்டவுன்.. கட்டுக்கடங்காமல் குவிந்த குடிமகன்கள்.. சென்னையை சுற்றி மாஸ் வசூல்!
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், நேற்று சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மது விற்பனை அமோகமாக இருந்தது.
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆள் மாறாட்டம் மோசடிக்கு வழிவகுக்கும் face app... விளையாட்டு விபரீதமாக அதிக வாய்ப்பு
12 நாட்கள் லாக்டவுன்
இன்று தொடங்கி 12 நாட்கள் வரை (ஜூன் 30 வரை) சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் சென்னையை ஒட்டிய டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
சோழவரம் பொன்னரி
செங்கல்பட்டு, கூடுவாச்சேரி, சோழவரம், பொன்னேரி, திருக்கழுக்குன்றம், திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்பட சென்னையை சுற்றியுள்ள உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நேற்று கட்டுக்கடங்காமல் இருந்தது. பலரும் பெட்டி பெட்டியாக சரக்குகளை வாங்கி கொண்டு சென்றனர். நேற்று சென்னையில் இருந்து வெளியில் செல்பவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
மதுபான விற்பனை
அந்த வேளையில் சென்னையை சுற்றி கட்டுக்கடங்காமல் கூட்டம் இருந்தது. இதனால் மறுபக்கம் சென்னைக்குள் மதுபானங்களை பலர் வாங்கிக்கொண்டு மறைத்து தப்பி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் வழக்கமாக சென்னையை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளில் 6 கோடிக்கு மட்டுமே மது விற்பனையாகும். ஆனால் நேற்று மட்டும் 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.
காஞ்சிபுரம் தெற்கில் 16 கோடி
திருவள்ளூர் மேற்கு பகுதியில் மட்டும் 12 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையானதாக கூறப்படுகிறது. இந்த பகுதி தான் சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து வெறும் 30 கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள பகுதியாகும். இதேபோல் காஞ்சிபுரம் வடக்கு பகுதியில் 5 கோடி ரூபாய்க்கும் காஞ்சிபுரம் தெற்கு பகுதியில் 16 கோடி ரூபாய்க்கும் மதுவிற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.செங்கல்பட்டு பகுதில் மட்டும் கோடிக்கணக்கில் மது விற்பனையாகி இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த 12 நாட்களுக்கு மதுபானங்கள் வாங்க முடியாது என்பதால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள குடிமகன்கள் மொத்தமாக மதுபாட்டிகல்களை வாங்கி குவித்துள்ளதாக தெரிகிறது.