நடப்பது "அம்மா"வின் ஆட்சி.. கொரோனா போகும் வரையாவது.. மதுவை விலக்கி வைத்திருக்கலாமே!
நாளை மதுக்கடைகள் திறந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற கலக்கம் வந்துள்ளது
சென்னை: "அம்மா"வின் ஆட்சி நடப்பதாக சொல்லும் நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்க நீதிமன்றம் பச்சை கொடி விட்டது.. அதனால் நாளைக்கே கடை திறக்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்கு கலவையான கருத்துக்கள் எழுந்துள்ளன.
Recommended Video
மக்களும், அரசும் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து கை கோர்த்து கொரோனா போரை வெல்லலாம் என்றார்கள்.. அதன்படியே அரசு என்ன சொன்னதோ, அதை கேட்டு மக்களும் உத்தரவுகளை மதித்து, பின்பற்றி வந்தனர்.. இனியும் அப்படியே பின்பற்றவும் செய்வார்கள்.
ஆனால் டாஸ்மாக் தேவை என்பதை யாருமே கோரிக்கை வைக்காத நேரத்தில் அரசு, இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது... "இப்போயார் கேட்டாங்க டாஸ்மாக், ஐயா தயவு செய்து கடையை தொறந்துடாதீங்க" என்று பல தாய்மார்கள் கண்ணீர் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் துணிச்சலாகவே வெளியிட்டனர்.
சொந்த ஊர் திரும்பிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள்- வட இந்தியாவில் படுவேகமாக உயரும் கொரோனா பாதிப்பு
சமூக விலகல்
ஆனால், ஒருங்கிணைந்து நடத்தக்கூடிய போர் என்று அரசு சொல்லி வந்த நிலையில், மதுக்கடைகளை திறந்துவிட்டது அரசின் பின்னடைவாக பார்க்கப்பட்டது.. வெறும் 2 நாள் கடைகள் திறந்து வைக்கப்பட்ட நிலையில், அங்கு நடந்த மோதல், வெடிப்பு, சமூக விலகல் கட்டுப்பாடு தகர்ப்பு என அனைத்துமே நடந்து முடிந்துவிட்டது.. 2 நாளில் தமிழக மாவட்டங்களில் ஏராளமான வன்முறைகள் நிகழ்ந்தன!
உத்தரவு
இதன்பிறகுதான் கோர்ட், கேஸ் என்று சென்று இப்போது உத்தரவு வந்துள்ளது.. இது நீதிமன்ற உத்தரவு என்பதால் அதை நாம் விமர்சிக்க முடியாது.. அதேபோல ஒரு அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற நியதியும் உள்ளது.. ஒருவேளை இதற்கு மறுப்பு சொன்னாலும், நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது என்ற வாதத்தை அரசு தன்தரப்பில் வெளிக்காட்டும்.. அதனால் அரசையோ, நீதிமன்றத்தையோ நாம் விமர்சிக்கவும், அதை பற்றின கருத்து சொல்லவும் முடியாது.
மக்கள் நலன்
ஆனால் மக்கள் நலன் என்று ஒன்று உள்ளது.. அதை பற்றி நாம் கவலைப்பட முழு உரிமை உள்ளது.. தொற்று முழுவதுமாக இன்னும் குறையாத நிலை உள்ளது.. டாஸ்மாக்குகளில் வயது, ஆதார் கார்டுகளின் ஆதாரத்தை கொண்டு சரக்குகள் வழங்கப்படுவதாக சில விதிகள் சொல்லப்பட்டன.. ஆனால் 2 நாளில் எங்குமே அந்த விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை.. அப்படி இருக்கும்போது, இனி வரும் காலங்களில் இவைகள் முழுவதுமாக சரிபார்க்கப்படுமா? பில்லிங் மிஷின்கள் டாஸ்மாக் கடைகளில் பெருமளவு இல்லை என்று சொன்னார்கள், இனிமேல் அவையெல்லாம் பூர்த்தி செய்யப்படுமா? சமூக விலகலை கடைப்பிடிக்காவிட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அப்படியாயின் எத்தனை ஆயிரம் பேர் மீது, என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்? என்ற பல சந்தேகங்கள் எழுகின்றன.
பரட்டை தலை
ஒருவேளை நோய் தொற்றின் தீவிரம் குறைந்தபிறகு, டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டால் கூட பரவாயில்லை.. இப்போதே திறந்து விட்டால் மக்களின் உயிர்களுக்கு பாதகம் ஏற்பட்டு விட்டால் என்னாவது? இந்த மக்கள் உயிரோடு இருந்தால்தானே டாஸ்மாக் கடைகளுக்கு வந்து சரக்கு வாங்க முடியும்? அத்தியாவசிய பொருட்களுக்கே கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பரட்டையும், தாடியுமாக ஆண்கள் நடமாடினாலும்கூட, சலூன் கடைகளையும் திறக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது.
அம்மா ஆட்சி
அப்படி இருக்கும்போது, அங்கு வந்து செல்லும் மக்களுக்கு பாதுகாப்பு மிக மிக அவசியமானதாகிறது. காரணம் இது அம்மாவின் ஆட்சி என்கிறார்கள்.. வேறு ஆட்சியாக இருந்தால் கூட பரவாயில்லை... அம்மாவின் ஆட்சி என்று அத்தனை பேரும் போற்றும் இந்த ஆட்சி, நிச்சயம் இதை யோசித்து பார்த்திருக்க வேண்டும் என்று மட்டும் சொல்ல தோன்றுகிறது.
டாக்டர் ராமதாஸ்
கஜானா காலி என்பதால்தான் கடைகளை திறக்க முடிவு என்று யதார்த்தத்தை மக்களும் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.. ஆனாலும் இதற்கு எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன.. அதற்கான சில ஐடியாக்களைகூட டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே பலமுறை சொல்லி உள்ளார்.. அவைகளை பின்பற்றியிருக்கலாம்.. எப்படியும் கடைகளை திறந்தால் கூட்டம் வழிந்து நிறையும்.. முதல் நாள் கடை திறந்தபோதே தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீசார் தடியடியும் நடத்தினர்.
ரத்தம்
டாஸ்மாக்கில் நடந்த கலவரத்தில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட, கைகளில் பாட்டிலும் சிரிப்புமாக நடந்து சென்ற குடிமகன்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது.. வருத்தமாகவும் உள்ளது.. எத்தனை இடத்தில் அடிதடியை கொண்டு இவர்களை கட்டுப்படுத்த முடியும் என தெரியவில்லை... கிராமப்புற பகுதிகளில் இதை கட்டுப்படுத்தவும் முடியாது. நிச்சயம் நோய்ப் பரவவலை இது அதிகரித்து விடும்.
எதிர்க்கட்சிகள்
மதுக்கடை விஷயத்தில் எதிர்க்கட்சிகள் போதுமான அழுத்தத்தை தரவில்லை என்பதே உண்மை.. ஆளுக்கு ஒரு அறிக்கை, பேருக்கு ஒரு கண்டனம் என்று இருந்ததே தவிர, யாருமே கொதித்தெழவில்லை.. இந்நேரம் ஆவேசம் வந்து பொங்கியிருந்திருக்க வேண்டும்.. உண்மையை சொல்ல போனால், மக்கள் நீதி மய்யம் எடுத்த முயற்சியை கூட யாரும் எடுக்கவில்லை.. எதிர்க்கட்சிகளின் இந்த மேம்போக்கான எதிர்ப்பு நமக்கு மேலும் கலக்கத்தை தருகிறது.
பரிசீலனை
இப்போதுவரை நமக்கு தலைவலியாக இருப்பது அன்று கோயம்பேட்டை திறந்துவிட்டதுதான்.. ஆனால் இதற்கு "வியாபாரிகள்தான் காரணம், நாங்கள் காரணமில்லை, எத்தனையோ முறை சொன்னோம், ஆனால் அவர்கள் கேட்கவே இல்லை.. அவர்களால்தான் வைரஸ் பரவிவிட்டது" என்று அரசு தற்போது காரணம் சொல்லுகிறது. வியாபாரிகள் மீது காரணம் சொல்லப்பட்டு விட்டாலும், இனிமேல் டாஸ்மாக் மூலம் நோய் பரவினால் அரசு யாரை காரணம் சொல்லும்? பாதிப்பு பெருகிவிட்டால் இதற்கு யார் பிரதானமாக இருப்பார்கள் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டால் நல்லது.. அதேபோல அம்மாவின் ஆட்சிதானா இது என்பதையும் யோசித்து செயல்படுவதும் நல்லது!!