செங்கல்பட்டில் 40, திருவள்ளூரில் 41, காஞ்சிபுரத்தில் 16 மதுகடைகள் திறப்பு! சென்னை குடிமகன்கள் சோகம்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 41 மது கடைகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 மதுக்கடைகளும் திருவள்ளூர் மாவட்டத்தில் 40 மதுக்கடைகளும் 44 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே மது வழங்கப்படுகிறது. சென்னை குடிமகன்கள் எல்லை தாண்டி மது வாங்க வந்தால் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
Recommended Video
தமிழக அரசு மே 7ம் தேதியான இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. சென்னை, மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி சென்னையை தவிர தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் திறக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் டாஸ்மாக்
காஞ்சிபுரம் வட்டத்தில் ரெட்டிப்பேட்டை தெரு, சாத்தான் குட்டை, செவிலிமேடு, ஸ்ரீகங்கா நகர் கீழ்கதிர்பூர், வேடல், செவிலிமேடு, களியனூர், ஈஞ்சம்பாக்கம், திருப்பூட்குழி, திம்மசமுத்திரம் ஆகிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வாலாஜாவில் ஊத்துக்காடு பகுதியில் 3 கடைகள்,. உத்திரமேரூர் பகுதியில் கடல்மங்கலத்தில் 2 சாலவாக்கதில் 1 என மொத்தம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டில் டாஸ்மாக்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள 45 கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள செங்கல்பட்டு வட்டத்தில் 10, மதுராந்தகம் வட்டத்தில் 9, திருக்கழுக்குன்றம் வட்டத்தில் 12, திருப்போரூர் வட்டத்தில் 10 கடைகள் என மொத்தம் 41 கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் 41 கடைகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 128 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் சென்னை காவல் மாவட்டத்தை ஒட்டியுள்ள செவ்வாப்பேட்டை, மீஞ்சூர், சோழவரம், வெள்ளவேடு,வெங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 10 கடைகள் இன்று திறக்கப்படவில்லை அதேபோல் நோய் தொற்று பாதிப்பு காரணமாக 66 கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற 40 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
எப்படி வழங்கப்படுகிறது
இந்த மூன்று மாவட்டங்களிலும் மது வாங்கக்கூடியவர்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டு அல்லது ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 டோக்கன்கள் வழங்கப்படுகிறது. 50 பேருக்கு மதுபானம் விநியோகம் செய்த பின்னர் மீண்டும் 50பேருக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. பொது இடத்தில் மது குடித்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி செல்ல முடியாது
இதற்கிடையே சென்னை குடிமகன்கள் எல்லை தாண்டி வாந்து மதுவாங்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையுமீறி யாரேனும் சென்னையில் இருந்து அண்டை மாவட்டங்களில் மதுவாங்க வந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று வடக்கு மண்டல ஐஜி நேற்று எச்சரித்திருந்தார். இதனால் சென்னை குடிமகன்கள் யாரும் மதுவாங்குவதற்கு செல்ல முடியாமல் உள்ளார்கள். சென்னையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.