சென்னையில் ஜெகஜோராய் 5 மாதங்களுக்குப் பின் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பு!
சென்னை: கொரோனாவால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னையில் இன்று காலை 10 மணி முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மதுபானங்களை சமூக இடைவெளியுடன் வாங்க வசதியாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம். சென்னையைப் பொறுத்தவரையில் சராசரியாக ஒருநாளைக்கு 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது.
இந்த பாதிப்பு திடீரென குறையவும் தொடங்கியது. சென்னை நகரில் நோய்கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டுவிட்டன. சென்னையை தவிர பிற மாவட்டங்களில்தான் தற்போது கொரோனா பாதிப்பு விஸ்வரூபமெடுத்து வருகிறது.
பந்தல் கூட ஓகே.. அது ஏன் மைக் செட்.. சென்னை டாஸ்மாக்களில் ஏன் இந்த திடீர் ஏற்பாடு.. இதுதான் காரணம்!
சென்னை மதுகடைகள் திறப்பு
மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு கோர தாண்டவமாடினாலும் மதுபான கடைகள் திறந்தே இருக்கின்றன. அத்துடன் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை படுஜோராகவும் இருக்கிறது. இதனையடுத்தே சென்னையிலும் டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
குடிமகன்களுக்கான ஏற்பாடுகள்
டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு வரும் குடிமகன்களை ஒழுங்குபடுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டன. சமூக இடைவெளியுடன் குடிமகன்கள் நிற்க வேண்டும் என்பதற்காக்க இடைவெளி வளையங்கள், தடுப்புகள் போடப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் குடிமகன்களுக்கு அறிவுறுத்தல் விடுக்க மைக்செட்டுகளும் கட்டப்பட்டன.
மதுகடைகள் திறக்கப்பட்டன
மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசாரும் நிறுத்தப்பட்டனர். காலையில் 9 மணி முதலே டாஸ்மாக் கடைகளுக்கு குடிமகன்கள் வரத் தொடங்கினர். குடிமகன்களுக்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்பட்டன. பின்னர் 10 மணிக்கு பூஜை பரிவாரங்களுடன் கடைகள் திறக்கப்பட்டன.
மதுகடைகள் திறக்க எதிர்ப்பு
சென்னை மாவட்டத்தில் 5 மாதங்களுக்குப் பின்னர் இன்றுதான் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இந்த மதுபான கடைகளை இப்போது திறப்பதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஏற்கனவே கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.