டாஸ்மாக் போராட்ட அறிவிப்பு... திமுகவை முந்திக்கொண்ட திருமாவளவன்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் அறிவித்தது திமுக தரப்பே எதிர்பார்க்காத ஒரு நிகழ்வாம்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் உள்ள இல்லத்தில் தங்கியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
இந்நிலையில் அங்கிருந்தவாறே ஜும் செயலி மூலம் காணொலியில் கட்சிப் பணிகள் குறித்தும் நிர்வாகிகளுடனும் தினமும் பேசி வருகிறார்.
கருப்புச் சின்னத்துடன் திமுக தோழமைக் கட்சி தலைவர்கள் போராட்டம்... அரசுக்கு எதிராக முழக்கம்
முதல் ஆளாக
தமிழகத்தில் மே 7-ம் தேதி (இன்று) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதை கண்டித்ததுடன் முதல் ஆளாக விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்தும் என அறிக்கை விட்டார் திருமாவளவன். இவரது போராட்ட அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கும் சென்றது. கொரோனா பதற்றம் தொடங்கியதற்கு பின்னர் இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் போராட்டம் என்ற வார்த்தையை உச்சரிக்காத நிலையில் முதல் நபராக அதனை நடத்துவோம் என பிரகடனப்படுத்தினார் திருமா.
தயக்கம்
திமுக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக இந்த நேரத்தில் போராட்டம் நடத்தினால் சரியாக இருக்குமா என யோசித்துக்கொண்டிருந்த நிலையில் திருமா அதற்கான அறிவிப்பையே வெளியிட்டுவிட்டார். இது தமிழக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்ததுடன், இது தொடர்பான விவாதங்கள் தான் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வந்தது. திருமாவளவனின் போராட்ட அறிவிப்பை மற்ற அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரள அரசியல் கட்சிகளும் கவனிக்கத் தவறவில்லை.
திமுக கூட்டணிக் கட்சிகள்
திருமாவளவனின் இந்த போராட்ட அறிவிப்பை திமுக முகாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து உடனடியாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்திய ஸ்டாலின், கருப்புச்சின்னம் அணிந்து அவரவர் வீடுகளுக்கு முன்பு நின்று போரட்டம் நடத்துவது என முடிவெடுத்தார். இந்த விவகாரத்தில் திமுகவை முந்தி திருமா அறிவிப்பு வெளியிட்டதில் அந்தக் கட்சியில் உள்ள ஒரு சில மாநில நிர்வாகிகள் முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆலோசித்திருக்கலாம்
இதனிடையே அறிவாயலத்தில் இருந்து திருமாவை தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர் ஒருவர், ஒரு ஆலோசனையாவது தலைவருடன் நடத்தியிருக்கலாம், பரவாயில்லை நல்ல முடிவை எடுத்துள்ளீர்கள் என வருத்தம் தோய்ந்த குரலில் பேசினாராம். ஊரடங்கு காரணமாக திருமாவளவனால் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்ப முடியாததால் அங்குள்ள இல்லத்திலேயே அவர் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.