டாஸ்மாக் மூலம் கொட்டுகிறது பணம்... சரக்கு விற்று கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: 'டாஸ்மாக்' மது விற்பனை வாயிலாக, 2018 - 19ம் நிதியாண்டில், தமிழக அரசுக்கு, 31 ஆயிரத்து, 158 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 4,360 கோடி ரூபாய் அதிகமாகும்.
தமிழ்நாட்டில் 5,198 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன்மூலம் தமிழக அரசுக்கு அதிக வருமானம் கிடைத்து வருகிறது. சாதாரண நாட்களில் தினமும் ரூ.70 கோடி கிடைக்கிறது. பண்டிகை நாட்களில் ரூ.100 கோடி வரை வருமானம் வருகிறது.
இதுகுறித்து சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிற்கு பீர் ஏற்றுமதி செய்யப்பட்ட வகையில், 2017-2018-ம் ஆண்டு ஈட்டப்பட்ட வருவாய் ரூ.172.98 லட்சம், இந்த வருவாய் 2018-2019-ம் ஆண்டில் ரூ.577.91 லட்சமாக உயர்ந்துள்ளது. மதுபானங்களுக்கான சிறப்புரிமை கட்டணம், உரிமக்கட்டணம், விண்ணப்ப கட்டணம் போன்றவை கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
3 கோடி சில்லரை வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு
இதன்மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.23.35 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபானங்களின் சிறப்பு கட்டணம் மூலமாக ரூ.22.52 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டு ரூ.11.24 கோடியாக இருந்தது. மது வருவாயை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 26,797.96 கோடி ரூபாய் வருவாய் எட்டப்பட்டது. இந்த ஆண்டு 31,157.83 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இதனிடையே, 2017 - 18ல், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி இருந்த, 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும், 1,086 ஓட்டல்கள், கிளப்களில் இருந்த, பார்களும் மூடப்பட்டன. இதனால், அந்த ஆண்டில், மது விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டதால், அரசுக்கு கிடைத்த வருவாயும் குறைந்தது.பின், உச்ச நீதிமன்ற அனுமதியுடன், மூடிய மது கடைகள் திறக்கப்பட்டதுடன், கிளப், ஓட்டல்களிலும், மது விற்பனை துவங்கியது. இதனால், 2018 - 19ல், மது விற்பனை அதிகரித்ததால், அரசுக்கு, அதிக வருவாய் கிடைத்துள்ளது என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.