குடிமகன்கள் கவனத்திற்கு... நாளை டாஸ்மாக் கடைகள் இல்லை.. மதுரை ஹைகோர்ட் உத்தரவு
நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தேச பிதா மகாத்மா காந்தி மறைந்த தினத்தையொட்டி நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரத்தீஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், தான் வசித்து வரும் விளவங்கோடு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக இருப்பதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
டாஸ்மாக் கடைகள்
மேலும் ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினம் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் ரத்தீஷ் தெரிவித்திருந்தார்.
மதுரை ஹைகோர்ட்
இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் எதிர்மனுதாரராக, மதுவிலக்கு ஆயத்தீர்வை உள்துறை செயலரை நீதிமன்றமே முன்வந்து தாமாக சேர்த்து கொண்டது.
காந்தி நினைவு தினம்
காந்தி ஜெயந்தியை போன்று, காந்தி நினைவு தினத்திலும் மதுக்கடைகள் மூடப்படுகிறதா என நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினர். பின்னர், நாளை காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால், நாளை ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
18-ம் தேதி ஒத்தி வைப்பு
மேலும், மதுக்கடைகள் மூடியது தொடர்பான அறிக்கையை வருகிற 18ம் தேதிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அன்றைய தினத்துக்கு இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.