வண்டலூர் முதல் எண்ணூர் வரை.. எங்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும்.. எங்கெல்லாம் மூடப்படும்?
சென்னை: நாளை மறுநாள் சென்னை பெருநகர எல்லைக்குள் வராத பகுதிகளில் மட்டுமே மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி சென்னை மாநகர காவல் எல்லைக்கு வெளியே உள்ள பகுதிகளில் மட்டுமே திறக்கப்பட உள்ளது.
Recommended Video
தமிழக அரசு வரும் மே 7ம் தேதி முதல் மதுக்கடைகளை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படாது என்று விளக்கம் அளித்தது.
எனினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சென்னையில் மதுக்கடைகளை திறப்பது என்பது பேராபத்தில் முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக அரசு மதுக்கடை திறப்பு விவகாரத்தில் மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா -டாஸ்மாக் திறப்புக்கு எதிராக கமல்ஹாசன்
சென்னை மாவட்டம்
இதன்படி சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் மே 7ம் தேதி திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. சென்னை மாநகர காவல் எல்லை என்பது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கீழ் வரும் சென்னையையொட்டியுள்ள பல்வேறு புறநகர்ப் பகுதிகளும் சேர்த்தே வரும். எனவே சென்னை மாவட்டம் மட்டுமல்லாமல் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளிலும் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.
வண்டலூர் வரை
சென்னை மாநகர காவல் எல்லை என்பது மேற்கே திருநின்றவூர் வரையிலும். வடக்கே மணலி, சாத்தங்காடு வரையிலும், கிழக்கே மாயாஜால் வரையிலும் உள்ளது. இதேபோல் பெங்களூர் சாலையில் பூந்தமல்லியைஅடுத்த நசரத்பேட்டை வரையிலும், மறுபக்கம் குன்றத்தூர் வரையிலும், தெற்கே வண்டலூர் வரையிலும் வருகிறது.
சென்னை எல்லைகள்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சென்னை மாநகர காவல் எல்லைகள் அமைந்துள்ளன. சென்னை மாநகர காவல் என்பது மொத்தம் நான்கு மண்டலங்கள் ஆகும். இதில் 48 சப் டிவிசன்கள் உள்ளன. இதில் 135 காவல் சரகங்கள் உள்ளன. இதில் தற்போது உள்ள சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளும் அடங்கி விடுகின்றன.
திருவள்ளூரில்
எனவே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மதுக்கடைகள் எங்குமே திறக்கப்படாது. அதேநேரம் திருவள்ளூர், கேளம்பாக்கம், பொன்னேரி ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகள் சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்குள் வராது என்பதால் அங்கு மே 7ம் தேதி முதல் மதுக்கடைகள் திறந்திருக்கும் என தெரிகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவுவதால்தான் இப்பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்துள்ளது.