ராத்திரி 10 மணி வரை குடிக்கலாம்.. கடை திறந்திருக்கும்.. "குடி"மக்களுக்கு சியர்ஸ் போட்ட தமிழக அரசு!
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக்கடைகள் இயங்கும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகையே ஆட்டி படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரங்கு பிறப்பிக்கப்பட்டது.. இதையடுத்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன.
பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, அதாவது கடந்த மே மாதம் முதல் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் திரும்பவும் திறக்கப்பட்டன... அந்த வகையில் காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில், "தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் நண்பகல் 12.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் இனி 10 மணி என 2 மணி நேரம் கூடுதலாக திறக்கப்பட்டிருக்கும்.
தமிழகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் தியேட்டர்கள், பொழுதுப்போக்கு பூங்காக்களுக்கு அனுமதி
இதில், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.. அதனால் நாளை முதல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் கடையின் நேரத்தை நீட்டி, இந்த அறிவிப்பு வெளியானதையொட்டி குடிமகன்கள் இப்போதே குதூகலமாகி விட்டனர்!