பெட்ரோல், டீசல் மீது செஸ் வரியை குறைங்க.. பட்ஜெட்டில் மத்திய அரசுக்கு வலியுறுத்திய ஓபிஎஸ்
சென்னை: இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைக்க, மத்திய அரசிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டு கொண்டு உள்ளனர்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் அடிப்படை காரணமாக இருந்தாலும், பெட்ரோல் விலை 100 ரூபாயையும், டீசல் விலை 90 ரூபாயைத் தாண்டியுள்ளதற்கு முக்கியமான காரணம் மாநில அரசுகள் விதிக்கும் அதிகப்படியான வரிதான்.
இந்தச் சூழ்நிலையில்தான் மக்கள், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைத்து இதன் விலையைக் குறைக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
எரிபொருள் விலை உயர்வின் காரணமாகச் சாமானிய மக்கள் தினமும் வாங்கும் பால், காய்கறி, மளிகை பொருட்கள் முதல் அனைத்தும் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில்தான், மேற்கு வங்க மாநில அரசு வாட் வரிக் குறைப்பின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தலா ஒரு ரூபாய் குறைத்துள்ளது. இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜனவரி 29ம் தேதி எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாகக் குறைத்துள்ளது.
மேகாலயா அரசு கடந்த வாரம், பெட்ரோல், டீசல் மீது தலா ரூ.5 குறைக்க முதல்வர் காம்ராட் சங்மா உத்தரவிட்டார். 12ம் தேதி அசாம் மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.5 குறைத்து அறிவித்தன. இதனால் இரு மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.
நேற்று இரவு, நாகாலாந்து அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்துள்ளது. இதன்படி, பெட்ரோல் மீதான வரி ரூ.29 சதவீதத்திலிருந்து 25 ஆகவும், டீசல் மீதான வரி 17.50 சதவீதத்தில் இருந்து 16.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணிப்பது ஏன்.. வெளிநடப்பு செய்தபின் துரைமுருகன் ஆவேச பேட்டி
இதே வரிசையில் இடைக்கால பட்ஜெட்டில், ஓ.பன்னீர்செல்வம், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் காலம் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டு ஸ்கோர் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அவ்வாறு ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிடவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான புதிய செஸ் வரியை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.