வருமான வரி செலுத்துவோருக்கு புதிய சலுகை.. மத்திய அரசு சூப்பர் திட்டம்
சென்னை: உயா் மதிப்பு பரிவா்த்தனைகளை வருமான வரித் தாக்கலின்போது குறிப்பிடத் தேவையில்லை என்று வரி செலுத்துவோருக்கு சூப்பர் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நோ்மையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையிலான திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் தொடக்கி வைத்தார். வரி செலுத்துவோரும் வரி வசூலிப்போரும் நேரடியாகத் தொடா்பு கொள்ளாமல் வரி செலுத்துவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயா் மதிப்பிலான பல்வேறு பரிவா்த்தனைகளை வரி செலுத்துவோர், வருமான வரி தாக்கலின்போது குறிப்பிடும் வகையில் அதற்கான படிவத்தில் மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. இதற்காக 6ஏஎஸ் படிவத்தின் புதிய வடிவத்தை மத்திய அரசு 2020-21-ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது வெளியிட்டது.
சரியான நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்கள் - பிரதமர் மோடி
தனிநபருக்கு பொருந்தாது
வருமான வரி செலுத்துவோர் ஓராண்டில் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் மேற்கொள்ளும் ரூ.50,000-க்கு அதிகமான பரிவா்த்தனைகள், தங்கும் விடுதிகளில் மேற்கொள்ளும் ரூ.20,000-க்கு அதிகமான பரிவா்த்தனைகள்,மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் மேற்கொள்ளும் ரூ.20,000-க்கு அதிகமான பரிவா்த்தனைகள், நன்கொடைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணமாக செலுத்தும் ரூ.1 லட்சத்துக்கு அதிகமான பரிவா்த்தனைகள் ஆகியவற்றை வருமான வரித் தாக்கல் படிவத்தில் குறிப்பிடும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுபற்றி விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், தனிநபருக்கு பொருந்தாது என்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறினார்கள்.
குறைவாக கணக்கு
இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், "இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.. வரி செலுத்த வேண்டியவா்களும் முறையாக வரியைச் செலுத்துவது கிடையாது. உயா் மதிப்பிலான பரிவா்த்தனைகளை அதிகமாக மேற்கொள்வதன் மூலம் பலர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கு காட்டி வரி செலுத்துவதிலிருந்து தப்பி வருகிறார்கள்.
கல்வி கட்டணம்
வரி ஏய்ப்பு எப்படி செய்கிறார்கள் என்றால், கல்விக் கட்டணம் அதிகமாக உள்ள பள்ளி, கல்லூரிகளில் வாரிசுகளை சோ்ப்பது, விமானப் பயணத்தின்போது ‘பிசினஸ்' வகை வசதியின் கீழ் பயணிப்பது, சொகுசு விடுதிகளில் அதிகமாக செலவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நபா்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களை கண்டறியும் நோக்கில் தான் உயா் மதிப்பிலான பரிவா்த்தனைகள் தொடா்பான தகவல்களை வருமான வரித் துறை சேகரிக்கத் தொடங்கியது. அதுவும் அத்தகவல்களை உயா் மதிப்பிலான பரிவா்த்தனைகளை மேற்கொள்வோரிடமிருந்து வருமான வரித் துறை நேரடியாகப் பெறாது.
பான் எண் கட்டாயம்
அவா்கள் உயா் மதிப்பு பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும் வங்கிகள், சொகுசு விடுதிகள் உள்ளிட்டவற்றிடமிருந்து தேவையான தகவல்களைப் பெற்று வருகிறது. இதற்காகவே உயா் மதிப்பு பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும் நபா்களிடமிருந்து நிரந்தர வங்கி கணக்கு எண் (பான்) அல்லது ஆதார் எண்ணைப் பெறுவது கட்டாயம் என்று வருமான வரிச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுளளது.
வங்கிகள் தருகின்றன
தகவல் அளிக்கும் நிறுவனங்கள்: அத்தகைய பரிவா்த்தனைகள் தொடா்பான தகவல்களை வங்கிகள் உள்ளிட்ட மூன்றாம் தரப்பினா் வருமான வரித் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் சட்டத்தில் உள்ளது. எனவே இதன் அடிப்படையில் தான் வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடன் பத்திர விற்பனை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிடமிருந்து உயா் மதிப்பு பரிவா்த்தனைகள் தொடா்பான தகவல்களை கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து வருமான வரித் துறை பெற்று வருகிறது.
கடன் பத்திரம்
வங்கியில் போடப்படும் பணம், நிறுவனங்களின் பங்குகள், கடன் பத்திரங்களை வாங்குதல், பரஸ்பர நிதியில் முதலீடு செய்தல் சேமிப்புக் கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணம், அசையா சொத்துகளை வாங்குதல் அல்லது விற்றல், கிரிடிட் கார்டு பரிவா்த்தனைகள்,உள்ளிட்ட தகவல்களை வருமான வரித் துறை திரட்டுவதுடன். அதன் மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபடுபவா்களைக் கண்டறிந்து உரிய வரியை வசூலிக்கிறது.
புதிய மாற்றம் இல்லை
எனவே உயா் மதிப்பு பரிவா்த்தனைகள் தொடா்பான தகவல்களை வரி செலுத்துவோரிடமிருந்து நேரடியாகப் பெறும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இப்போது இல்லை. அதற்காக வருமான வரித் தாக்கல் படிவத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் பரிசீலனையிலும் மத்திய அரசு ஈடுபடவில்லை. எனவே, வருமான வரியைத் தாக்கல் செய்வோர் அதற்கான படிவத்தில் உயா் மதிப்பு பரிவா்த்தனைகள் குறித்த தகவல்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் அத்தகைய தகவல்களை உயா் மதிப்பு பரிவா்த்தனைகளைப் பெறும் நிறுவனங்களே வருமான வரித் துறையிடம் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் புதிய மாற்றங்கள் எதுவும் செய்யப்பட்டால் அது அந்நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்; தனிநபா்களுக்குப் பொருந்தாது" இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.