தமிழகத்தில் 6 லட்சம் பேர் எழுதும் ஆசிரியர் தகுதி தேர்வு துவங்கியது.. பறக்கும் படை தீவிர கண்காணிப்பு
சென்னை: தமிழகத்தில் டெட்(TET) எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. டெட் தேர்வானது இன்றும் நாளையும் என இரண்டு நாட்களுக்கு நடக்கிறது.
2 நாட்கள் நடைபெறும் டெட் தேர்வை சுமார் 6 லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு துவங்கியுள்ள டெட் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் கற்று கொடுக்கும் ஆசிரியர்கள், Tamil Nadu Teachers Eligibility Test சுருக்கமாக டெட் என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முடியும் என, கடந்த 2009-ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இடையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடப்பாண்டு முதல் தேர்வு நடத்த உத்தரவிட்டது.
இதனையடுத்து நடப்பாண்டிற்கான டெட் தேர்வு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, கடந்த மார்ச் 15-ல் துவங்கி ஏப்ரல் 12-ல் முடிந்தது. இந்த காலக்கட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்தது.
குருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை பூ துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார் பிரதமர் மோடி!
டெட் தேர்வில் மொத்தம் 2 தாள்கள் உள்ளன. இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாளையும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இரண்டாம் தாளையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் விண்ணப்பித்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் இன்றும், 2-ம் தாள் நாளையும் நடைபெறுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளில் தேர்ச்சி பெற வேண்டும். அதே போல 8ம் வகுப்பு வரை பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்
டெட் தேர்வுகளுக்காக தமிழகம் முழுவதும் 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 88 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வாளர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது