ஆசிரியர்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும்: தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு
சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் சொத்து விவரங்களை தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிரடியாக இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்கள் சொத்துக்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்ய பராமரிக்க வேண்டும் என்றும் பள்ளிகல்வித்துறை இயக்குனர் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஊழல் கண்காணிப்பு துறை அறிவுறுத்தலின்படி, சொத்து விவரங்களில் தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.