ஆசிரியர்கள் ஸ்டிரைக்... தேர்வு நேரத்தில் மாணவர்கள் அவதி... பெற்றோர் கவலை
Recommended Video
சென்னை: தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 7 லட்சம் பேர் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் அவதி
அரசின் கடும் எச்சரிக்கையையும் மீறி தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் 80 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, நாமக்கல் கூனவேலம்பட்டி தொடக்கப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
மாணவர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு எதிராக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சுனவேலம்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர் வரவில்லை. இதனால், பள்ளிக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். இன்னும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் மட்டும் அமர்ந்துள்ளனர்.
கஜா புயல் பாதிப்பு
இதே போல், கடலூரில் 1200 அரசு நடுநிலை பள்ளிகள் மூடல், வந்தவாசி ஒன்றியத்தில் 140 தொடக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டன. கஜா புயல் காரணமாக ஏற்கனவே பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்த காரணத்தால் மாணவர்களுக்கு பாடம் எடுக்க முடியாத சூழல் உருவாகி இருந்தது.
பெற்றோர் கவலை
இந்தநிலையில், மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்கள் பாதிக்கபடுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், அரசு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.