பள்ளிகளை ஒரு நாள் தள்ளி திறக்க வேண்டும்... ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
சென்னை: அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், மேலும் ஒருநாள் தள்ளி திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஜன.2-ம் தேதி ஈடுபடவுள்ளதால், அந்த பணிகள் நிறைவடையவே நள்ளிரவு ஆகும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இதையடுத்து அடுத்தநாளே 3-ம் தேதி பள்ளிகள் திறந்தால் ஆசிரியர்கள் ஓய்வின்றி அலுப்புடன் வர வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் தங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நள்ளிரவு வரை
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுவதால் அந்த பணிகள் முடிவடைய நள்ளிரவு வரை கூட ஆகலாம். இதனால் அடுத்தநாள் பள்ளிகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் அலுப்புடன் பாடம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரவு
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜனவரி 2-ம் தேதி அதிகாலை 5 மணிக்கே மையங்களுக்கு செல்ல வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை பணிகள் முழுவதும் முடிந்து பெட்டிகளை ஒப்படைத்த பின்னரே நள்ளிரவு ஆனாலும் அங்கிருந்து புறப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாள்
இதனிடையே இது தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள ஆசிரியர்கள் சங்கத்தினர்,தங்கள் நிலையை கருத்தில் கொண்டு ஜனவரி 3-ம் தேதிக்கு பதில் மேலும் ஒரு நாள் தள்ளி பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரிந்துரை
ஆசிரியர் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கை குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதாகவும், இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யும் எனவும் கூறப்படுகிறது.