தடதடக்கும் ஹைதராபாத்.. தெலுங்கானாவின் கிரண்பேடி ஆவாரா தமிழிசை.. டென்ஷனில் கேசிஆர்!
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது
Recommended Video
சென்னை: என்னது... இன்னொரு கிரண்பேடியா.. நாடு தாங்காது என்கிறார்கள் காங்கிரசார்... போற போக்கை பார்த்தால், ஆளுநர் தமிழிசை "தெலுங்கானாவின் கிரண்பேடி" ஆகவிடுவார் போல இருக்கிறது.
தமிழிசைக்கு ஆளுநர் பதவி என்பது கவுரவ பதவியாக கருதப்பட்டாலும், உண்மையில் பாஜகவின் நோக்கம் வேறு மாதிரியாகதான் உள்ளது.
தெலுங்கானா சட்டசபைக்கு, 2023-ல் தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஆட்சியை பிடிக்க தீவிர திட்டமிட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதியே தமிழிசை நியமனம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சர்ச்சை
தெலுங்கானாவில் தாமரையே மலர போவதில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு பாஜக தலைமை வந்துவிட்டதால்தான் பொறுமை, அனுபவம் வாய்ந்த தமிழிசையை அங்கு நியமித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அதன்படியே, அதற்கான வேலைகளையும் துவங்கிவிட்டார் தமிழிசை. பதவி ஏற்ற ஒரு வாரத்திலேயே சர்ச்சையில் சிக்கியவர்.. இன்னமும் ட்விட்டரில் மாட்டிக் கொண்டு விழித்து வருகிறார் தமிழிசை.
கேசிஆர்
இப்போது புதிதாக ஒரு விஷயம் முளைத்துள்ளது. தெலுங்கானா மக்களை நேரிடியாக சந்தித்து குறைகளை கேட்க போவதாக அறிவித்துள்ளார் தமிழிசை. இதை கேட்டதுமே, சந்திர சேகர ராவ் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல ஆகிவிட்டது. ஏனெனில் பொதுவாக, மாநில ஆளுநர்கள் என்பவர்கள், ஆட்சி தொடர்பான வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ அல்லது மக்களை சந்தித்து குறைகளை கேட்பதோ நடைமுறையில் கிடையாது.
பன்வாரிலால்
இதற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தவர்கள், நம்ம ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும்தான். அதனால்தான் இவர்கள் 2 பேருமே இன்று வரை சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். அதிலும் கிரண்பேடியோ ரொம்பவே ஓவர் என்கிறது அம்மாநில முதல்வர் தரப்பு!
சர்ச்சை
மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர், "நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்' என்று தமிழிசையிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்ப.. அதற்கு தமிழிசையோ, ஆமாம்.. எனக்கும் இப்படி எண்ணம் இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இதுதான் சர்ச்சையாகி உள்ளது. ஆளுநரின் அதிகாரித்தை மீறும் செயல் என்றும், தெலுங்கானாவில் பாஜகவை வளர்ப்பதற்காக மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்போகிறீர்களா? என்றும் பலர் தமிழிசையை கேள்வி மேல் கேட்டு வருகின்றனர்.
கிரண்பேடி
பதவியேற்றது முதலே, சனி, ஞாயிறு ஆகிவிட்டால் கிரண்பேடி இப்படித்தான் மக்களை சந்தித்து வருகிறார். விவசாயம், நீர்நிலைகள், கிராமபகுதிகள் என ஒரு இடம் விடாமல் மக்களை நேரடியாக சந்தித்து, ஆய்வுபணிகளை மேற்கொள்கிறார். அப்போது மக்களிடம் கிரண்பேடி பேசும் விதமே அலாதியானது. அந்த மக்களிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி கொள்வதுடன், தூய்மை பணியின் அவசியத்தை விடாப்பிடியாக இன்றுவரை தொடர்ந்து செய்து வருகிறார்.
அரசியல்?
மக்கள் பார்வையில் ஒருவகையில் இது நல்லது என்றாலும், ஆளுநருக்கான அதிகார வரைமுறை என்று வரும்போது, இவை சலசலக்கப்படுகிறது. அதேபோலதான் தமிழிசைக்கும் ஏற்படும் போல தெரிகிறது. அப்படி மக்களை சந்தித்து குறை தீர்க்கும் பணியில் தமிழிசை இறங்குவார் என்றால் நிச்சயம் கிரண்பேடியை விட சிறப்பாகவே தமிழிசையால் செய்ய முடியும். காரணம், தமிழிசைக்கு அடிப்படையிலேயே நல்ல மனசு உள்ளவர். ஆனால் மக்களை சந்தித்து குறை கேட்பது, அரசியலாக்கப்படுமா? அல்லது வரவேற்பை பெறுமா என்றுதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.