சென்னை மக்களே.. 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்துமாம்.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கத்தரி வெயில் முடிந்தும் சென்னையில் வெயிலின் தாக்கம் இதுவரை குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக சென்னையில் கடுமையான வெயிலும் அனல் காற்றும் வாட்டி வதைத்து வருகிறது.
இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் வெளியே செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். பகலில் கொளுத்தும் வெயிலால் இரவு நேரங்களிலும் கடுமையான புழுக்கம் நிலவி வருகிறது.
இந்நிலையில் 11 மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் , அரியலூர் , பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒரு வாரத்திற்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வெளுக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது வெயில் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் கூறியிருப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.