மழைக்கு வாய்ப்பில்லை... 9 மாவட்டங்களில் வெப்பம் தான் கூடும்... வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை இயல்பைக் காட்டிலும் அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 9-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் பெய்யும் மழைக்காக காத்திருப்போம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டு இருந்தார். கணிப்பு படி, மழை பெய்து, குடிநீர் பஞ்சம் தீரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் தமிழக மக்கள்.
இந்தநிலையில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியில் வெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மழையை பொருத்தவரை தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை , ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர் , தேனி ,ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும்வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் மழைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும், அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 4 செண்டி மீட்டரும், மயிலாடியில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.