சென்னை அருகே பயங்கரம்.. கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து பூசாரி, 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயம்
காஞ்சிபுரம்: வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியில் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், பூஜாரி உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வேங்கடமங்கலத்தில் உள்ளது, திருவேங்கடபெருமாள் கோயில். இங்குதான் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில், இரண்டு வருடங்களுக்கு முன்பாக குடமுழுக்கு நடத்தப்பட்டு, புனரமைக்கப்பட்டது.
இன்று காலை, வழக்கம்போல பக்தர்கள் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர். சனிக்கிழமை என்பதால் கோயிலில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
கோயில் பூஜாரி வரதராஜன் சாமிக்கு தீபாராதனை காட்டி விட்டு வெளியே வந்தபோது திடீரென மண்டபத்தின் மேற்கூரை திடீரென, அப்படியே பக்தர்கள் நின்ற பகுதி மீது விழுந்தது. இதில், பூசாரி வரதராஜன், 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
அவங்க கட்சிக்காரங்களே பேனர கிழிச்சிட்டு எங்களை சொல்றாங்க... ஐஜியிடம் தங்க தமிழ்ச்செல்வன் புகார்!
பூஜாரி மேல்சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டையிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கதிர்வேலு, ரஞ்சனா, தன்ஷிகா ஆகிய மூன்று குழந்தைகள் உட்பட காயமடைந்த பிறரு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடமுழுக்கு நடைபெற்ற பிறகு, கோயிலில் நடைபெற்ற 2வது அசம்பாவித சம்பவம் இதுவாகும். கடந்த வருடம், துலாபாரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில், ஒரு குழந்தை பலியான நிலையில், இப்போது மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது அப்பகுதியினரிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.