கோவில்களில் திருவிழாக்களுக்கு எப்போது அனுமதி?.. அமைச்சர் சேகர்பாபு பதில் இதுதான்!
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருத்தேர் வீதியுலாவை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் திருத்தேர் வீதியுலா வருவது தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் வழிகாட்டு முறைகளுக்கு உட்பட்டு கோவில்களில் வீதியுலா தொடங்கியுள்ளது.
செந்தில்பாலாஜி vs அண்ணாமலை.. முற்றும் மோதல்.. 'மன்னிப்பு கேட்க முடியாது'.. அண்ணாமலை திட்டவட்டம்!
நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி
தமிழ்நாடு கோவில்களில் உள்ள நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி கடந்த 13-ம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. நகைகளை உருக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவில் இருக்கும் தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு எவ்வளவு நகைகள் உருக்கப்பட்டுள்ளது? அதன் எடை என்பது என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளிப்படைத் தன்மையுடன் தெரிவிக்கப்படும்.
திருவிழாக்களுக்கு எப்போது அனுமதி?
கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் கோவில்களை திறப்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா குறைந்த பிறகு கோவில்களில் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 11 வருடங்களாக பல கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத திருத்தேர்களும் மீண்டும் பயன்பட்டிற்கு கொண்டு வரப்படும்.
ஆக்கப்பூர்வமான நடவடிக்கை
திருத்தணி கோயிலில் இந்த மாத இறுதியில் திருத்தேர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டும். குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் அதற்கேற்ப ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், ' பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருகிறாரே'' என்று கேள்வி எழுப்பினார்கள்.
பதிலடி தரப்படும்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, '' பா.ஜ.க.வினர் தங்களை காட்டிக் கொள்வதற்காக வேண்டும் என்றே அரசை குறை கூறி வருகிறார்கள். அண்ணாமலை இதைத்தான் செய்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் குறைகளை சுட்டிக்காட்டி இருந்தால் பா.ஜ.க நடுநிலையான கட்சி என கூறலாம். ஆதாரம் இல்லாமல் அரசை குறை கூறினால் அதற்கு தகுந்த முறையில் பதிலடி தரப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.