தமிழகம் முழுவதும் இன்று முதல் வழிப்பாட்டு தலங்கள் திறப்பு.. அதிகாலையிலேயே குவிந்த மக்கள்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் இவை திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Recommended Video
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியன இத்தனை நாட்கள் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த மாதம் முதல் ஆண்டு வருமானம் சுமார் 10ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள கோயில்களை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. பிரபல கோயில்களான மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் உள்ளிட்ட கோயில்கள் திறக்கப்படவில்லை.
24 மணி நேரத்தில் புதிய தொற்று பாதித்த நாடுகளில் முதலிடம் இந்தியாவுக்கு.. 2ஆவது இடம் பிரேசிலுக்கு!
அன்லாக் 4.0
தமிழகத்தில் இந்த மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் பல தளர்வுகள் அன்லாக் 4.0 என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோயில்கள் திறப்பு, வணிக வளாகங்கள், பெரிய கடைகள் திறப்பு, முழு லாக்டவுன் நீக்கம், பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
வழிகாட்டும் நெறிமுறைகள்
தமிழகத்தில் இன்று முதல் கோயில்கள் திறப்பு என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காலை முதலே பக்தர்கள் குவிந்துள்ளார்கள். அது போல் மசூதிகள், தேவாலயங்களும் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இங்கு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்து தனித்தனியே அறிவிக்கப்பட்டுள்ளன.
தடை
கோயில்களில் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், பூ,பழம் அர்ச்சனை தட்டு உள்ளிட்டவற்றை கொண்டு செல்லக் கூடாது. விபூதி, குங்குமம், பிரசாதம், ஜடாரி உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கக் கூடாது. கொடி மரத்தை தொடுவதோ, அதன் அருகே பக்தர்கள் உட்காருவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம்
பக்தர்கள், அர்ச்சகர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போல் தேவாலயங்களுக்கு வருவோர் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், பூக்களை கொண்டு வரக் கூடாது, புனித நூல்களை தொடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழுகைகள்
அது போல் மசூதிகளில் தனிநபர் இடைவெளியுடன் தொழுகைகள் நடத்தப்பட வேண்டும். அதற்கான விரிப்புகளை அவர்களாகவே கொண்டு வர வேண்டும். இறுதி தொழுகை இரவு 7.45 மணிக்கு தொடங்கி 8 மணிக்கு முடித்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் இவை அனைத்து இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது இந்த வழிபாட்டு தலங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.வழிபாட்டு தலங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. கிருமிநாசினியும் வழங்கப்படுகிறது.