பரபரப்புக்கு பஞ்சமில்லாத வசந்தி முருகேசன்.. தென்காசியில் மீண்டும் நிற்பாரா.. வெல்வாரா?
Recommended Video
சென்னை: கடந்த 2017-ல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வைத்திருந்தவர் தென்காசி எம்பி வசந்தி முருகேசன்தான்!!
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி என ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதுதான் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி.
இங்கு கடந்த 2014 லோக்சபா தேர்தலில் அதிமுகவின் சார்பில் வசந்தி நிறுத்தப்பட்டார். எம்ஏ படித்த வசந்திக்கு வயது 56. வசந்தி, அதிமுகவின் நெல்லை மாநகர் மாவட்ட இணைச் செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார். இது ஒரு தலித் தொகுதி ஆகும். கடந்த முறை தென்காசி தொகுதியில் வசந்தி போட்டியிட்டபோது, இவரை எதிர்த்து போட்டியிட்டது புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
கிருஷ்ணசாமி
இந்த தொகுதியில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,82,081 ஆகும். இதில் 10,17,938 வாக்குகள் பதிவாகின. கிருஷ்ணசாமியைவிட, வசந்தி 1,61,774 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வசந்தி, நாடாளுமன்ற விவாதங்களில் 21 முறை பங்கெடுத்திருக்கிறார். இவரது வருகை பதிவு 74 சதவீதம் ஆகும். அவையில் இவர் எழுப்பிய கேள்விகள் 250 ஆகும்.
கணவர் முருகேசன்
மாவட்டத்தில் பிரதான தொழிலாக நெசவு மற்றும் விவசாயங்கள் என இருந்தாலும் இவரது கேள்விகள் எண்ணிக்கையை பார்த்தால் மாவட்டத்திற்கு போதிய பலனை இவர் பெற்று தரவில்லையோ என எண்ண தோன்றுகிறது. மறைந்த ஜெயலலிதா மீது மிகுந்த பாசமும், விசுவாசமும் கொண்டவர்தான் வசந்தி முருகேசன். இவரது கணவர் முருகேசனும் தென்காசி எம்.பி-யாக இருந்தவர்தான்.
திணறினார்
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நிறையவே தடுமாறியவர் வசந்தி. குறிப்பாக அதிமுக இரண்டாக உடைந்தபோது, எந்த பக்கம் போவது என்று தெரியாமல் திணறினார். கொஞ்ச நாளைக்கு டிடிவி தினகரனிடம் இருந்தார்.
அணி மாறினார்
ஆனாலும் தீவிர ஈடுபாட்டுடன் இல்லாமல் குழப்பமாகவே இருந்தார். கடைசியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைச் சந்தித்துப் பேசியதோடு, அவர்களது அணியில் இணைந்துகொண்டார். இந்த சம்பவம் அன்றைக்கு பரபரப்பாக பேசப்பட்டது.
மீண்டும் போட்டியிடுவாரா?
அணி மாறி தன் விசுவாசத்தை காட்டிய வசந்தியை மீண்டும் தென்காசியிலேயே போட்டியிட அதிமுக முன்வருமா? என தெரியவில்லை. ஆனால் தன்னிடமிருந்து அணி மாறி சென்ற வசந்தியை தோற்கடிக்க டிடிவி தினகரன் நிச்சயம் ஏதாவது வியூகம் வைத்திருப்பார் என்று நம்பலாம்.