மோடியே சொல்லிட்டாரு.. அந்த தொகுதியை கொடுத்திட வேண்டியதுதான்.. அதிமுக முடிவு?
Recommended Video
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில் தென்காசி (தனி) தொகுதி பாஜக கூட்டணி கட்சியான புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமிக்கு என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் மோடியா, இல்லை இந்த லேடியா என்று கேட்டு பிரச்சாரம் செய்தார் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த மறைந்த ஜெயலலிதா.
கன்னியாகுமரி மற்றும், தர்மபுரி ஆகிய இரு லோக்சபா தொகுதிகளை தவிர்த்து, தமிழகத்தில் எஞ்சிய 37 லோக்சபா தொகுதிகளில் 'லேடிக்கு' ஆதரவாகத்தான் மக்கள் வாக்களித்தனர். அந்த இரு தொகுதிகளிலும் மோடியின் பாஜக கூட்டணி வென்றது.
கூட்டணி உறுதி
ஆனால், இந்த லோக்சபா தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து களம் காண திட்டமிட்டுள்ளது அதிமுக. ஆனால், இந்த கூட்டணிக்கான நிர்பந்தம் பாஜக தரப்பில் இருந்துதான் முன் வைக்கப்பட்டு வருகிறது. இப்போது தொகுதி பங்கீடு தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், வரும் 20ம் தேதி கூட்டணி முடிவு உறுதியாக அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.
தென்காசி தொகுதி
இந்த நிலையில், தென்காசி தொகுதி, பாஜக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமிக்குதான் என்பது திட்டவட்டமாகிவிட்டதாம். தென்காசி தொகுதியில் இதுவரை 5 முறை போட்டியிட்டுள்ளார் கிருஷ்ணசாமி. கடந்த 2014ல் இவர் திமுக கூட்டணி வேட்பாளராக களமிறங்கினார். ஆனால் லட்சக்கணக்கான வாக்குகளை பெற்றாலும், அத்தனை முறையும், வெற்றி வாய்ப்பை சிறு இடைவெளியில்தான் இழந்துள்ளார்.
தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகள்
இந்த நிலையில்தான், இம்முறை, பாஜகவிற்கு தென்காசி தொகுதியை அதிமுக விட்டுத்தருவது என்றும், அதில், கிருஷ்ணசாமி போட்டியிட வசதியாக, பாஜக புதிய தமிழகத்திற்கு விட்டுத்தரும் என்றும் கூறப்படுகிறது. தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகள் இங்கு பெருமளவில் இருப்பதால், கிருஷ்ணசாமி வெற்றி இம்முறை உறுதி என நினைக்கிறது பாஜக.
மதுரையில் பேசிய மோடி
சமீபத்தில் மதுரையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, தேவேந்திர குல வேளாளர்கள் சார்பில் தன்னிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். மோடி குறிப்பிட்டு பேசிய ஒரே ஜாதி பிரிவு தேவேந்திர குல வேளாளர்கள்தான். இவர்களை தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு மாற்றகோரி புதிய தமிழகம் வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கையை மோடி சூசகமாக தெரிவித்தார். கிருஷ்ணசாமியும் சமீபகாலமாக பாஜக ஆதரவு குரலாகவே ஒலித்து வருகிறார். இந்த நிலையில்தான், தேவேந்திர குல வேளாளர்கள் விஷயத்தில் பிரதமரே தனிக்கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
தென்காசி உறுதி
மோடியே பொதுக்கூட்டத்தில், தேவேந்திர குல வேளாளர்களை குறிப்பிட்டு பேசிவிட்டார், இனி கிருஷ்ணசாமிக்கு தென்காசியை தருவதை தவிர வேறு வழியில்லை என அதிமுக தலைவர்கள் சிலர் நினைப்பதாக கூறப்படுகிறது. தற்போது தென்காசி தொகுதி எம்.பியாக அதிமுகவின் வசந்தி முருகேசன் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.