அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்திற்கு கிடைக்கப்போகும் அந்த ஒரு தொகுதி எது தெரியுமா?
Recommended Video
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில் தென்காசி (தனி) தொகுதி புதிய தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் புதிய தமிழகம் கட்சி திமுக கூட்டணியில் இருந்தது. 2016 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் இருந்தது. ஆனால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை.
இதன்பிறகு, பாஜகவுடன் நெருக்கம் காட்ட தொடங்கினார் கிருஷ்ணசாமி. பாஜக இப்போது, அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் இணைந்து கொண்டது.
அதிமுக கூட்டணியில் இணைந்தது புதிய தமிழகம் கட்சி.. ஒரு தொகுதி ஒதுக்கீடு!
தென்காசி
முறைப்படி, இன்று, அதிமுக மற்றும் புதிய தமிழகம் கட்சி நடுவே, கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தானது. புதிய தமிழகம் கட்சிக்கு, ஒரு மக்களவை தொகுதியை வழங்குவது என அதிமுக முடிவு செய்துள்ளதாக கூட்டணி உடன்படிக்கையில் தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கான நிர்பந்தம் பாஜக தரப்பில் இருந்துதான் முன் வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், தென்காசி தொகுதி, புதிய தமிழகம் கட்சிக்குதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஷ்ணசாமி இந்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.
வெற்றி வாய்ப்பு
தென்காசி தொகுதியில் இதுவரை 5 முறை போட்டியிட்டுள்ளார் கிருஷ்ணசாமி. கடந்த 2014ல் இவர் திமுக கூட்டணி வேட்பாளராக களமிறங்கினார். ஆனால் லட்சக்கணக்கான வாக்குகளை பெற்றாலும், அத்தனை முறையும், வெற்றி வாய்ப்பை சிறு இடைவெளியில்தான் இழந்துள்ளார். இந்த நிலையில்தான், இம்முறை, புதிய தமிழகத்திற்கு, தென்காசி தொகுதியை அதிமுக விட்டுத்தருவது என்று முடிவாகியுள்ளதாம். அதிமுக வாக்கு வங்கியோடு சேர்த்து, தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகள் இங்கு பெருமளவில் இருப்பதால், தனது வெற்றி உறுதி என நினைக்கிறார் கிருஷ்ணசாமி.
மதுரையில் பேசிய மோடி
ஜனவரி 27ம் தேதி மதுரையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, தேவேந்திர குல வேளாளர்கள் சார்பில் தன்னிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். மோடி தனது உரையில் குறிப்பிட்டு பேசிய ஒரே ஜாதி பிரிவு தேவேந்திர குல வேளாளர்கள்தான். இவர்களை தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு மாற்றகோரி புதிய தமிழகம் வலியுறுத்தி வருகிறது. ஆதிதிராவிடர் இனப்பிரிவுகளில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக மோடி சூசகமாக தெரிவித்தார். கிருஷ்ணசாமி விஷயத்தில் பிரதமரே தனிக்கவனம் செலுத்துவதை இந்த பேச்சு உணர்த்தியது.
தென்காசி உறுதி
இதன்பிறகும், தேவேந்திர குல வேளாளர்கள் விஷயத்தில் தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்ததால், அதிமுக கூட்டணியில் சேருவதில் கிருஷ்ணசாமி காலதாமதம் செய்து வந்தார். 2 தினங்கள் முன்பாக, இக்கோரிக்கை தொடர்பாக ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் ஒரு குழுவை அமைத்து முதல்வர் உத்தரவிட்டார். இதனால் கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.