"தேரே மேரே பீச் மெய்ன்"... உங்கள் அலைகளுக்கு ஓய்வே இல்லை பாலு!
கடல் அலைகளுக்கு ஓய்வுண்டா.. அது போலதான் எஸ்பிபி என்ற பெருங்கடலுக்கும்.. நமது மனக் கரையை அது தொட்டு தொட்டு தாலாட்டிக் கொண்டேதான் இருக்கும்.
1981ம் ஆண்டு.. அப்பெல்லாம் இளையராஜா பைத்தியம் பிடிக்காத ஒருவரை தமிழகத்தில் காணவே முடியாது.. அப்படி ஒரு இசைப் பைத்தியம் பிடித்தாட்டிக் கொண்டிருந்த கால கட்டம்.. அந்த சமயத்தில்தான் அந்த காந்தத்தையும் தாண்டி இன்னொரு காந்தமாக வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார் எஸ்பிபி.
உண்மையில் இளையராஜாவுக்கு நிகரான அல்லது அவரை விட ஆளுமையான ஒரு போட்டியாளர் என்றால் அது எஸ்பிபி மட்டும்தான். இளையராஜாவின் இசையில் எஸ்பிபி பாடும்போது அந்த பாடல் வேறு லெவலில் இருக்கும். இருவருமே அப்படி போட்டி போட்டு பின்னி எடுப்பார்கள். அவருக்கு நிகர் இவரே.. இவருக்கு சரி அவரே.. இதைத் தாண்டி யாராலும் எதையுமே வெல்ல முடியாத நிலை.
எஸ்பிபி: கம்பீரமான குரல் இன்னும் 100 ஆண்டுகள் ஒலிக்கும்.. ஆனால் அதன் உரிமையாளர்?.. ரஜினி உருக்கம்
ஏக் துஜே கேலியே
அப்படிப்பட்ட காலகட்டத்தில் 1981ல் இந்தியாவையே புரட்டிப் போட்டது ஒரு பாட்டு.. அதுதான் ஏக் துஜே கேலியேவில் இடம் பெற்ற "தேரே மேரே".. இந்தப் பாடலுக்கு கலங்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. மொழியே புரியாமல் பல ஆயிரம் முறை ரசித்த ஒரு பாடல் என்றால் இதற்குத்தான் முதலிடம் கொடுக்கலாம். அப்படி மயக்கிப் போட்ட பாட்டு இது. எஸ்பிபி என்ற மகா கலைஞனுக்காகவே இதைக் கேட்டு ரசித்தவர்கள் லட்சக்கணக்கில் இருப்பார்கள்.
மாயக்குரலோன்
இதன் இசையை தாண்டி எஸ்பிபியின் அந்தக் குரல்தான் அந்தக் காலத்து இளைஞர்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. அந்தப் படம் அப்போது ஏற்படுத்திய பிரளயத்தை விட எஸ்பிபியின் பாடல்கள்தான் மிகப் பெரும் இதய ஊடுருவலை உண்டு பண்ணியது என்று சொல்ல வேண்டும்.. தேரே மேரே பாடலின் சோக வெர்ஷன் இன்னும் அதி தீவிரமானது.. அப்படியே அழ வைத்து விடும்.. மிகப் பெரிய வசியக்காரன்தான் இந்த பாலு.
தனி வசீகரம்
ஒரு நடிகன் முக பாவனையில் கொண்டு வருவதை தங்களது குரலில் அப்படியே பிரதிபலிக்கும் பாடகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.. பாலுவுக்கு அதில் தனி இடம் உண்டு.. அதிலும் கமல்ஹாசனின் காதல் பாடல்களில் அப்படி ஒரு தனிச் சுவையை கொடுப்பார் பாலு.. அதை அவர் மட்டுமே கடைசி வரை மிகச் சிறப்பாக செய்தவர். கமல்ஹாசனின் தெலுங்குக் குரலாக அவர் திகழ்ந்தார் என்றால்.. அதற்கு இந்த இருவருக்கும் இடையிலான அந்த ஆத்மார்த்தமான புரிதல்தான் மிக மிக முக்கியம்.
கமலை மிஞ்சிய குரல்
தேரே மேரே பாடலில் கமல்ஹாசனின் நடிப்பை மிஞ்சியது பாலுவின் குரல்தான்.. அதில் சந்தேகமே இல்லை. அப்போது சிட்டி முதல் பட்டி வரை மிக மிக பிரபலம் இந்தப் பாடல். தமிழ் பாடல்களுக்கு கடும் போட்டி கொடுத்து டாப்பில் எகிறிக் கொண்டிருந்த நேரம். கமல்ஹாசன் படம், கேபி படம் என்பதையெல்லாம் தாண்டி அவர்களுக்கு நிகராக எஸ்பிபி மக்களை வசீகரித்துக் கொண்டிருந்தார் இந்தப் பாடல் மூலம்..
மனதைப் பிசைகிறதே
எஸ்பிபி என்ற மாயக் கலைஞனின் மகோன்னதமான இந்தக் குரல் மிக மிக அரியது. எல்லோருக்கும் வாய்த்து விடாது.. அப்படிப்பட்ட குரலை மிக மிக சரியாக பயன்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஒவ்வொரு இசையமைப்பாளரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.. எஸ்பிபி மறைந்து போய் விட்ட இந்த நேரத்தில் இந்தப் பாடல் வந்து மனசை அப்படிப் போட்டுப் பிசைகிறது.
"உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ... இது என்ன வினோதமான பந்தம்?"
அந்தப் பாடல் வரிகளைப் போலத்தான் மாறிப் போயிருக்கிறது பாலுவுக்கும், நமக்குமான பந்தம்.. நிச்சயம் நமக்கு இது பேரிழப்பு.. சந்தேகமே இல்லை.