தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் என தகவல்.. ஆயிரக்கணக்கான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை
சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 6 இடங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தமிழகத்தின் முக்கிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் அடுத்தடுத்து குண்டு வெடித்து 290 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இது சம்பந்தமாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தும்போது, இந்த தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு உள்ளதாகவும், முதலில் குறி வைத்ததே தமிழ்நாட்டுக்குத்தான் என்றும் பகீர் தகவல்கள் வெளியாகின. அதனால் யாரெல்லாம் இந்த ஐஎஸ் அமைப்புக்கு உதவி செய்துள்ளார்கள் என்றும் தனியாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், இப்போது தமிழ்நாட்டுக்கு உள்ளே தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மொத்தம் 6 பேர் என்றும், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த இவர்கள், இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல்களை எல்லாம் உளவுத்துறை போலீசாருக்கு தந்து அலர்ட் செய்துள்ளது. உளவுத்துறை எச்சரித்த நிலையில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் என தெரிந்தால், உடனே போலீசாரை பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதுமே முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை, பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார்.