தமிழகத்தில் 20% நெருங்கும் கொரோனா பாசிடிவ் விகிதம்... இந்த 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாசிடிவ் விகிதம் 19% வரை அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2ஆம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் புதிதாக 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களில் வைரஸ் பாதிப்பு மேலும் உயரக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது பற்றி விஜயானந்த் என்பவர் தனது ட்விட்டரில் விளக்கியுள்ளார்.
சென்னை நீங்கலாகத் தமிழகத்தில் கொரோனா பாசிடிவ் விகிதம் தற்போது 19.3%ஆக உள்ளது. சென்னையில் கொரோனா பாசிடிவ் விகிதம் 20.3% ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் கொரோனா பாசிடிவ் விகிதம் 19.5%ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பரிசோதனையில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது என்பதை பாசிடிவ் விகிதம் எனப்படும்.
கொரோனா பாசிடிவ் விகிதம் தொடர்ந்து உயர்வதால் கோவை, செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், சேலம், நெல்லை ஆகிய ஒன்பது மாவட்டங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விஜயானந்த் பதிவிட்டுள்ளார்.
மேலும், கடந்த மார்ச் 15ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்களில் 30-39 வயதுடையவர்களின் எண்ணிக்கை 5% உயர்ந்துள்ளது. ஆக்டிவ் கேஸ்களில் 60-69 வயதுடையவர்களின் எண்ணிக்கை 4% குறைந்துள்ளது.
அதேநேரம், ஏப்ரல் 26ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் 60-79 வயதுடையவர்கள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோல, தற்போது சிகிச்சை பெற்று வரும் 40-49 வயதுடையவர்களின் எண்ணிக்கை 0.8% மற்றும் 0-9 வயதுடைய சிறார்களின் எண்ணிக்கை 1.2% சதவிகிதமும் உயர்ந்துள்ளது.