என் சிவப்பு துண்டை என்கிட்ட கொடுத்திருங்க.. செவிலியர்களிடம் கேட்டு வாங்கி தோளில் போட்ட தா பாண்டியன்
சென்னை: என் சிவப்பு துண்டை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என அங்கிருந்த செவிலியர்களிடம் தா பாண்டியன் கேட்டு வாங்கி போட்டு கொண்டாராம். உடல்நிலை முடியாவிட்டாலும் தனது கட்சி மீது அவருக்கு இருந்த பற்றையே இது காண்பிக்கிறது.
1953 ஆம் ஆண்டு அதாவது தனது 21 ஆவது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஐக்கிய கம்யூனிஸ்ட் என்ற கட்சியை தொடங்கி தா பாண்டியன் 1983 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் மாநில செயலாளராக இருந்தார்.
1989 ஆம் ஆண்டும் 1991 ஆம் ஆண்டும் வடசென்னை தொகுதியின் எம்பியாக இரு முறை தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்துவிட்டு அவர் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் படுகாயமடைந்த தா பாண்டியன்.. என்ன செய்தார் தெரியுமா?
மைக்
அது முதல் அவரது இறுதி மூச்சு வரை தா பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு மக்கள் நலனுக்காக பாடுபட்டு வந்தார். இந்த நிலையில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார். அங்கு மைக்கை பிடித்து பேசினார். இவரது பேச்சு தொண்டர்கள் முன் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மூச்சு திணறல்
இந்த நிலையில் சென்னை வந்த தா பாண்டியனுக்கு நேற்று முன் தினம் திடீரென மூச்சு பிரச்சினை ஏற்பட்டது. மருத்துவர் வரவழைக்கப்பட்டு மருந்து கொடுக்கப்பட்டது. எனினும் காலை மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் ஆம்புலன்ஸ் மூலம் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நேற்று முன் தினம் பகல் பொழுதில் அனைவரிடமும் பேசி வந்தார்.
செவிலியர்கள்
ஆனால் இரவு முதல் அவரால் பேச முடியவில்லை என்கிறார்கள். எனினும் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடமும் முத்தரசனிடமும் தா பாண்டியன் உடல்நிலை குறித்து விசாரித்து வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரது தோளில் இருந்த சிவப்புத் துண்டை செவிலியர்கள் எங்கோ எடுத்து வைத்துவிட்டார்கள்.
துண்டை காணாது
இரவு நேரத்தில் தனது துண்டை காணாது திடுக்கிட்ட தா பாண்டியன் செவிலியர்களை அழைத்தார். அப்போது என் சிவப்புத் துண்டை என்கிட்டயே கொடுத்துடுங்கம்மா என கேட்டிருக்கிறார். பின்னர் செவிலியர்களும் அந்த துண்டை கொடுத்துள்ளார்கள். இதை பார்க்கும் போது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தனது கட்சி மீது எத்தனை பற்று கொண்டிருந்தார் என்பதையே காட்டுகிறது.