தை பொங்கல் 2021: பொங்கல் வைத்து சூரியனை வழிபட நல்ல நேரம்
பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைக்க நல்ல நேரம் ஜோதிடர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் மாட்டுப்பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் வைத்து வழிபட நல்ல நேரம் ஜோதிடர்களால் கணிக்கப்படுகிறது.
Recommended Video
சூரியன் மகரம் ராசியில் பயணிக்கும் நாள் தை திருநாளாக கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடதிசை பயணம் உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்கத்தினை பொங்கல் பண்டிகையாக உற்சாகமாக கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் என்பது பொங்கு என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். அறுவடை முடிந்து புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது விவசாய பெருமக்களின் நம்பிக்கை.
நம் வாழ்க்கையில் வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது.
போகிப்பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி சொல்லும் வகையில் இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வியாழன்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 8.00 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும்.
ஜனவரி15ஆம் தேதி வெள்ளிக்கிழமை கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாட்டு தொழுவத்தையும் அலங்கரித்து பொங்கல் வைக்கலாம். மாட்டுப்பொங்கல் நாளில் காலை 8 மணி முதல் 09 மணிவரை பொங்கல் வைத்து வழிபடலாம். மாலை 05 மணி முதல் 6 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம்.
தை திருநாளில்...குடும்பங்களில் மகிழ்ச்சி, செழிப்பு நிலவட்டும்... தமிழக தலைவர்கள் பொங்கல் வாழ்த்து!
வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கோலமிட்டு கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புதுப்பானையில் புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்பி நம் வளர்ச்சிக்கு காரணமான இயற்கைக்கும் இறைவனுக்கும் படையல் போட்டு செங்கரும்பு வைத்து அலங்கரித்து நன்றி கூறி வழிபடுவார்கள். நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து வழிபடுவோம் நம் வீட்டில் மங்கலம் பொங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.