ஏறி இறங்கும் தங்கம்... தங்கத்தை ஏன் தாய் வீட்டு சீதனமாக பெண்களுக்கு கொடுக்கிறார்கள் தெரியுமா
தங்கம் என்ன விலை விற்றாலும் அதன் மீதான மோகம் குறைந்தபாடில்லை.
சென்னை: பெண்களின் தாய் வீட்டு சீதனத்திலேயே மிகச்சிறந்த சீதனம் தங்கம்தான். புகுந்த வீட்டிற்கு போகும் மகளுக்கு பெற்றவர்கள் போட்டு அனுப்பும் தங்கம் மகளின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல தலைமுறைக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பதனால்தான் மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக தங்க நகைகளை சேமிக்கத் தொடங்குகின்றனர். இப்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது என்றாலும் தங்கத்தை வாங்கும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ரூ. 43 ஆயிரம் வரை உச்சத்திற்கு போன தங்கம் பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது மீண்டும் 41 ஆயிரம் ரூபாயை தொடப்போகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்த தங்க விலை, கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது வரலாறு காணாத ஏற்றத்தை கண்டது. சுமார் ரூ.43 ஆயிரம் வரை உயர்ந்த தங்க விலை 50 ஆயிரத்தை எட்டும் என கூறப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்க விலை குறைந்து வந்த மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,111க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.40,888க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உடனே விசாரியுங்கள்.. நீங்கள்தான் முழு பொறுப்பு.. லடாக்கில் விடாமல் உரசும் சீனா.. புதிய குற்றச்சாட்டு
தங்கம் அணியும் பெண்கள்
உலக தங்கச்சந்தையில் இந்தியாவிற்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. தென் மாநில திருமணங்களில் மணமகளும், மணமகனும் அணிவதற்காகவே தங்க நகைகளை வாங்குகின்றனர். தமிழ்நாட்டில் ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்கள் தவிர பிற மாதங்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதற்காக சவரன் சவரனாக தங்கம் வாங்குகின்றனர்.
அம்மா கொடுக்கும் சீதனம் தங்கம்
தாய் வீட்டு சீதனமாக மணமகளுக்கு திருமணத்தின் போது கொடுக்கப்படுகிறது. தங்கம் செல்வத்தை கொடுக்கும். பாதுகாப்பை கொடுக்கும். இது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. ஆண் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கும் பெற்றோர்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சீதனமாக தங்கத்தை கொடுத்து அனுப்புகின்றனர்.
கேரளாவில் தங்க நகைகள்
இந்திய தங்க நகை ஆபரண சந்தையில் 40 சதவிகிதம் தென்னிந்தியாவே தக்க வைத்துக்கொண்டுள்ளதாக கூறுகிறது உலக தங்க கவுன்சில். கேரளாவில்தான் மணமகள்கள் அதிக தங்க நகை அணிகின்றனர். திருமண நாளில் சராசரியாக 40 முதல் 50 சவரன் வரை அணிந்திருப்பார்களாம். கேரளாவில் அதிகம் அணியும் நகைகளை பார்த்தால் முல்லை மொட்டு மாலை, கோதுமை சங்கிலி, லட்சுமி ஆராம், காசுமாலை, பாலக்கல் நெக்லஸ், மாங்கா மாலை, பூ தாலி மாலை, கருமணி மாலை என சரம் சரமாக அணிந்திருப்பார்கள்.
சவரன் கணக்கில் தங்கம்
அதற்கு அடுத்த இடத்தில் தமிழகம், ஆந்திராவை சேர்ந்த மணமகள் தங்க நகை அணிகின்றனர். தமிழ்நாட்டில் இப்போது ஆரம், மாங்காமலை, நெக்லஸ், அட்டியல், சரமாலை என வசதிக்கு ஏற்ப ரகம் ரகமாக அணிகின்றனர். இப்போது ஆண்களும் அதிக அளவில் தங்க நகை அணியத் தொடங்கியுள்ளனர். பிரேஸ்லெட், செயின் என சவரன் கணக்கில் அணிந்து கொள்வது அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை தாறு மாறு
கடந்த 5 நாட்களில் மட்டும் சவரன் ரூ.2740 அளவுக்கு குறைந்துள்ளது. கிடு,கிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை சற்று குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. ஆவணி மாதத்தில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்தது மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் தங்கம் உயர்ந்து வருவதால் நகை வாங்குபவர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். தங்கம் குறையுமா? கூடுமா ஒரே ஊசலாட்டமாக இருக்கே காத்திருக்கலாமே என்றும் யோசிக்கத் தொடங்கியுள்ளனர் மக்கள்.