ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
கரூர் தொகுதியில் சீட் கிடைக்குமா என தெரியவில்லை என்று தம்பிதுரை கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: எதிர்பார்த்தபடியே.. மு.தம்பிதுரை நினைச்சது எதுவுமே இதுவரை நடக்கவில்லை.. ஆனால் அதிமுக நினைத்த விஷயங்கள் மட்டும் தங்கு தடையின்றி நடந்து வருகிறது.
அதிமுகவில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை யாரை எடுத்து கொண்டாலும் அதில் தெளிவாகவும் உறுதியாகவும் பேசி வருபவர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைதான்! ஆனால் அவருடைய இந்த கறார்தனமான பேச்சுதான் கிட்டத்தட்ட கட்சியிலிருந்து ஒதுக்கி விடும் நிலைக்கு வந்துவிட்டது.
ஜெயலலிதா இறந்தவுடன் முதல்வராக படாதபாடுபட்டார் தம்பிதுரை. இதற்காக டெல்லியிலேயே முட்டி மோதியும் பார்த்தார். ஒன்றும் வேலைக்காகவில்லை. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதை ஆணித்தரமாக சொல்லி வருவதுடன், தனது எதிர்ப்புகளை அவ்வப்போது நாடாளுமன்ற அவையிலேயே வெளிப்படுத்தினார் தம்பிதுரை. இதனால் வெளிப்படையாகவே பாஜகவை பகைத்து கொள்ளவும் ஆரம்பித்தார்.
தொகுதி பங்கீட்டு குழு
தம்பிதுரை பேசுவதெல்லாம் அவர் சொந்த கருத்து என்று அதிமுக தலைவர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அதுவும் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு ஐவர் குழு அமைத்து முறைப்படி அறிவிக்கப்பட்டதில், தம்பிதுரையின் பெயரும் இடம் பெறாமல் போயிற்று.
ஓரங்கட்டப்படுகிறாரா?
இதனால் பொறுப்புகளிலிருந்து தம்பிதுரை கழட்டி விடப்பட்டுள்ளார், ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்தன. ஒருவேளை தம்பிதுரை ஓரங்கட்டப்பட்டால் கண்டிப்பாக வரும் தேர்தலில் அவருக்கு எம்பி சீட் ஒதுக்கப்பட வாய்ப்புகள் குறைவுதான் என்றும் சொல்லப்பட்டன. கடைசியில் இந்த சந்தேகங்கள் இன்று உண்மையாகி கொண்டிருக்கின்றன.
மீண்டும் போட்டி?
முதலாவதாக, பாஜகவுடன் கூட்டணியே வேண்டாம் என்று கூக்குரலிட்டு கொண்டிருந்த நிலையில், ஒரேநாளில், அதுவும் விடிய விடிய பேச்சுவார்த்தை இரு கட்சிகளுக்கும் நடந்தது. இதனால் இந்த கூட்டணி ஊர்ஜிதமாகி உள்ளது. இரண்டாவது, அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு செய்திருந்தாலும், இந்த தொகுதியில் தனக்கு சீட் தருவதில் உத்தரவாதம் கிடையாது என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார்.
விஜயபாஸ்கர் தந்தை
ஏனென்றால் விருப்ப மனு தாக்கலின் கடைசி நாளான நேற்றுதான் தம்பிதுரை மனு தாக்கல் செய்தார். இதே கடைசி நாளில்தான், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.
உத்தரவாதம் இல்லை
இது தொடர்பாக செய்தியாளர்களும் தம்பிதுரையிடம் கேட்டனர், அதற்கு, "ஜனநாயக நாட்டில் அரசியலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். எனக்கு சீட் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. விஜயபாஸ்கரின் தந்தை கரூரில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன்" என்று சொன்னார்.
விருப்ப மனு
தம்பிதுரை கரூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் அமைச்சரின் தந்தையும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எதுவும் சொல்ல முடியாது
அது மட்டும் இல்லை, பாஜகவுடன் கூட்டணியே வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்தவர், இப்போது, "தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிமுக சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நான் இடம்பெறவில்லை. அதனால் நான் கூட்டணி குறித்து எதுவும் சொல்ல முடியாது." என்றும் தெரிவித்து விட்டார்.
ஆக மொத்தம், தம்பிதுரை விரும்பியது, கோரியது, எதுவுமே இதுவரை நடக்கவில்லை என்பதும், கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார் என்பதும் நிஜமாகி வருகிறது.